மனைவிக்காக டிராமா போட்டாரா பாமக மணிரத்தினம்??
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ்காரர் மணிரத்தினம், தனது மனைவி சுதாவை தேர்தலில் நிறுத்தும் வகையிலேயே தவறான முறையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ததாக ஒரு கிசுகிசு கிளம்பியுள்ளது.
பாமக வேட்பாளராக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டவர் மணிரத்தினம். மாற்று வேட்பாளராக இவரது மனைவி சுதா மனுத் தாக்கல் செய்தார்.
வே்ட்பு மனு பரிசீலனையின்போது மணிரத்தினத்தின் மனு சரியாக இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரியான சரவண வேல்ராஜ் தள்ளுபடி செய்தார். ஆனால் அவரது மனைவி சுதாவின் மனு பக்காவாக இருந்தது. இதனால் அது ஏற்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாமக, சுதாவை தற்போது வேட்பாளராக அறிவித்து வி்ட்டது. அதேசமயம், மணிரத்தினத்தின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியவையாக இருப்பதாக பாமகவினர் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதேசமயம், அங்கீகரிக்கப்படாத கட்சி பாமக. எனவே விதிமுறைப்படி, அவரது மனுவை 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால் மணிரத்தினம் மனுவை ஒருவர் மட்டுமே முன்மொழிந்திருந்தார். ஆனால் சுதா மனுவை மட்டும் 10 பேர் முன்மொழிந்துள்ளனர். இதுதான் பலரையும் குழப்பியுள்ளது.
சுதா மனுவை 10 பேர் முன்மொழிந்துள்ள நிலையில் ஏன் அவரது கணவர் மனுவை ஒரே ஒருவர் முன்மொழிந்தார் என்று கேட்கிறார்கள் பாமகவினர். எனவே மணிரத்தினம் வேண்டும் என்றே செய்திருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
மனைவிக்கு மட்டும் விதிமுறைகளைப் பார்த்து மனு தயார் செய்த மணிரத்தினம், அவருக்கு மட்டும் எப்படி தவறு செய்தார் என்பதுதான் சந்தேகமே..
நியாயமான சந்தேகமாகத்தான் தெரிகிறது...!