இந்தோனேசியா போனீங்களே, ஏன் போனீங்க... ஐடி கேள்வியால் தற்கொலை செய்தாரா விஜயபாஸ்கர் நண்பர்?
வருமானவரித்துறை சோதனை நடைபெற்ற போது விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியன் வீட்டில் இந்தோனேசியா சென்றது ஏன் என்று வருமான வரித்துறையினர் துருவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது,
அவர் இந்தோனேசியா சென்றுள்ளார். இந்தோனேசியாவுக்கு சென்றது தனிப்பட்ட முறையிலா அல்லது வர்த்தக ரீதியிலா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டதால், தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமக்கல்லைச் சேர்ந்த கான்ட்ராக்டர் சுப்ரமணியன்,58 திங்கட்கிழமையன்று செவிட்டுரங்கன்பட்டியிலுள்ள அவரது தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பிரேதபரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் தகனம் செய்து விட்டனர்.
சுப்ரமணியத்தின் மரணத்திற்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரணமடைந்த சுப்ரமணியன் கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை கட்டுமான பணிகளை செய்தது மூலம் அத்துறையின் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடனும் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை, கரூர் ஆகிய இடங்களில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை மேற்கொண்ட தோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல அமைச்சர்களுக்கும் நெருக்கமாக இருந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரி சோதனை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது கடந்த ஏப்ரல் 7ஆம் தேதியன்று தேர்தல் பணியாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் குவாரி மற்றும் நாமக்கல்லில் கான்ட்ராக்டர் சுப்ரமணியனின் வீடு, அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
விசாரணைக்கு ஆஜர்
இதில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இரண்டு முறை சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு சுப்ரமணியன் சென்று வந்துள்ளார். அவரது வீட்டில் சோதனை நடந்த சமயத்தில், சுப்ரமணியன் இந்தோனேசியா சென்றுள்ளார்.
இந்தோனேசியா சென்றது ஏன்?
இந்தோனேசியாவுக்கு சென்றது தனிப்பட்ட முறையிலா அல்லது வர்த்தக ரீதியிலா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரித்தனர். சுப்ரமணியன் முன்னுக்கு பின் முரனாக பேசவே, வருமானவரித்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தார்களாம்,
வங்கிக்கணக்குகள் முடக்கம்
இரண்டாவது முறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட நாளில் சுப்ரமணியனுடன் அவரது குடும்பத்தினரும் சென்றதாக தெரிகிறது, இரண்டாவது நாள் விசாரணையின் போதும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்த சுப்ரமணியனை வருமானவரித்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவரது வங்கி கணக்கு மற்றும் நிறுவன வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டன.
மீண்டும் சம்மன்
திங்கட்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறையினர், சுப்ரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த விசாரணையில் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருக்குமா என்பது குறித்து தனது சட்ட ஆலோசகர்களிடம் சுப்ரமணியன் ஆலோசித்தாராம்.
தற்கொலை முடிவு
இந்தோனேசியா சென்ற விவகாரம், அமைச்சர் விஜயபாஸ்கரின் ரகசியங்களை அறிந்து கொள்ள அமலாக்கத்துறையினர் தன்னை கைது செய்வார்களோ என்ற அச்சத்தில் சுப்ரமணியன் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.