விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் மரத்தடியில் உட்கார்ந்து பக்கம் பக்கமாக எழுதிய கடிதம் எங்கே??
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான காண்டிராக்டர் சுப்பிரமணியன், மரணத்திற்கு முன்பு பக்கம் பக்கமாக கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கடிதத்தைக் காணவில்லை.
தனது கணவர் மரத்தடியில் உட்கார்ந்து பக்கம் பக்கமாக கடிதம் எழுதிக் கொண்டிருந்ததாக அவரது மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் போலீஸாரோ, கடிதம் எதுவும் சிக்கவில்லையே என்று கூறியுள்ளனர். இதனால் அந்தக் கடித விவகாரம் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தை யாருக்கு எழுதினார் சுப்பிரமணியன். அதில் என்ன கூறியிருந்தார், அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து ஏதேனும் தெரிவித்திருந்தாரா என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.
செவிட்டுரங்கன்பட்டி பண்ணை வீடு
மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன்பட்டி கிராமத்தில்தான் சுப்பிரமணியனின் பண்ணை வீடு உள்ளது. இங்குதான் அவர் பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அவரது உடலையும் அவசரம் அவசரமாக தகனம் செய்து விட்டனர்.
ஏன் திடீர் தற்கொலை?
சுப்பிரமணியன் திடீரென தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்று தெரியவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிக மிக நெருக்கமானவர் சுப்பிரமணியன். விஜயபாஸ்கர் மூலமாக பல அரசு கட்டட காண்டிராக்டுகளை எடுத்தவர். விஜயபாஸ்கரின் கல்லூரிகளையும் கட்டிக் கொடுத்தவர். வருமான வரி ரெய்டு நடந்த சில நாட்களுக்குள் சுப்பிரமணியன் இறந்திருப்பது பெருத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மிரட்டல் காரணமா
ஏதோ ஒரு தரப்பிலிருந்து தொடர்ந்து சுப்பிரமணியனுக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர் பக்கம் பக்கமாக கடிதம் எழுதியதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மரத்தடியில் உட்கார்ந்து
மரணத்திற்கு முன்பு தனது பண்ணை வீட்டில் இயல்பான பணிகளைப் பார்த்துள்ளார். பின்னர் மரத்தடியில் உட்கார்ந்து கடிதம் எழுதியுள்ளார். நீண்ட நேரம் பக்கம் பக்கமாக எழுதியதாக அவரது மனைவியும், வீட்டு வேலைக்காரப் பெண்மணியும் கூறியுள்ளனர். யாருக்கு எழுதினார் என்பது தெரியவில்லை.
கடிதம் இல்லையே
ஆனால் இப்படி ஒரு கடிதம் சிக்கவே இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதான் பெரும் குழப்பத்தைக் கொடுத்துள்ளது. மரத்தடியில் உட்கார்ந்து பக்கம் பக்கமாக எழுதிய கடிதம் என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கடிதம் எங்கே போனது. ஒரு வேளை யாரிடமாவது சுப்பிரமணியன் கொடுத்து அனுப்பி விட்டாரா அல்லது தபாலில் யாருக்காவது அனுப்பி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.