ஸ்பெக்ட்ரம்: பிரதமரை மீறி அதிகாரம் செலுத்தவில்லை- ஆ.ராசா
சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமரை மீறி எதையும் செய்யவில்லை என்று முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
நான் எப்படி பிரதமரை மீறி செயல்பட முடியும். தேசிய தொலைதொடர்பு கொள்கை என்ற ஒன்று உள்ளது. அதன் நோக்கமே சாமானிய மக்களுக்கும் தகவல் தொடர்பு துறையின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
நானும் சட்டம் பயின்றுள்ளேன். எனவே அந்த அறிவின் அடிப்படையில் கூறுகிறேன், பிரதமரே நினைத்தாலும் தொலைதொடர்பு கொள்கைக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க முடியாது. பிரதமர் பதவி நாடாளுமன்றத்தை விட உயர்ந்த அதிகாரம் படைத்தது கிடையாது.
எனவேதான், அமைச்சரவையை கூட்டி, தொலைதொடர்பு கொள்கையை மாற்றம் செய்து அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமரை நான் வலியுறுத்தினேன். ஆனால் சில டெலிகாம் நிறுவனங்கள் இம்மாற்றத்தை விரும்பவில்லை. தகவல் தொடர்பு துறையில் புரட்சி செய்வதை சில சக்திகள் விரும்பவில்லை.
அந்த சக்திகள் பிரதமருக்கு கடிதம் எழுதின. இந்த விவகாரத்தில் மன்மோகன்சிங் மவுனம் காத்தார். ஏனெனில் அவருக்கு தொலைதொடர்பு கொள்கை குறித்து தெரியாது. இவ்வாறு ராஜா கூறியுள்ளார்.
ரதமரின் ஊடக ஆலோசகராக பதவி வகித்த சஞ்சய் பாரு எழுதிய 'விபத்தாக வந்த பிரதமர்' என்ற புத்தகத்தில் பிரதமரை மீறி ராசா செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.