சென்னை கலவரம் : சமூக விரோதிகள் கல்வீசினர்... போலீஸ் தடியடி நடத்தியது - கமிஷனர் ஜார்ஜ்
மாணவர்களின் போராட்ட களத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியதே கலவரத்திற்கு காரணமாகி விட்டது என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
சென்னை : ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லட்சக்கணக்கானவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த முழக்கத்திற்கு நடுவே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.
அவசர சட்டம் இயற்றப்பட்டு விட்ட பின்னரும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. நிரந்தர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். நெல்லையில் மட்டுமே போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
இன்று அதிகாலையில் மெரீனாவில் இருந்தவர்களிடம் சட்ட முன்வடிவு நகல்களை காவல்துறையினர் அளித்தனர். கலைந்து செல்லுங்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவே காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் வெளியேற்றினர்.
ஆனாலும் ஏராளமானவர்கள் கடற்கரை அருகில் சென்று தண்ணீரில் இறங்கி போராடினர். இந்த நிலையில் மெரீனாவிற்கு வரும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. காவல்துறையினர் அனைத்து சாலைகளிலும் நிறுத்தப்பட்டனர். பறக்கும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கல்வீச்சு
இதனையடுத்து திருவல்லிக்கேணி சாலையில் பேரணியாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கவே நிலவரம் கலவரமானது. இதனையடுத்து மாணவர்கள், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
சென்னை கலவரம்
போராட்டம் திசை மாறவே காவல்துறையினர் களத்தில் இறங்கினர். சென்னையில் பல பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. பதற்றம் உருவானது. பல பகுதிகளில் மறியல் ஏற்படவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலமை கட்டுக்கடங்காமல் போனது. பேருந்துகளின் மீது கற்கள் வீசப்பட்டன. 92 பேருந்துகள் சேதமடையவே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஜார்ஜ் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இன்று விளக்கம் அளித்தார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசும், காவல் துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார். மெரீனாவில் இருந்து ஒரு மணி நேரத்தில் கலைந்து செல்வதாக தம்மிடம் மாணவர்கள் உறுதி அளித்தனர் என்று தெரிவித்தார்.
சமூக விரோதிகள்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் அவசர சட்டம் பற்றி விளக்கப்பட்டது. போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு சில சக்திகள் ஊடுருவியிருந்தனர்
மாணவர்கள் வாக்குறுதி அளித்தது போல கலைந்து செல்லவில்லை. பிராதான கோரிக்கைகளில் இருந்து போராட்டக்காரர்களின் நோக்கங்கள் மாறியது
திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையிலும் சமூக விரோதிகளுடன் மோதல் ஏற்பட்டது.
உளவுத்துறை தகவல்
போராட்டகுழுவில் சிலர் மிரட்டல், அச்சுறுத்தல் விடுத்ததாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததாக கூறினார். மெரினாவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
வாகனங்கள் சேதம்
சென்னை மெரினாவில் போராட்ட குழுக்கள் அமைதியான முறையிலேயே கலைக்கப்பட்டதக தெரிவித்தார். வன்முறை தடுப்பு நடவடிக்கையின்போது 94 போலீசார் காயமடைந்தனர். மேலும் வன்முறை சம்பவத்தின்போது 51 காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
கட்டுக்குள் உள்ளது
சென்னை மாநகரில் 7,000 காவலர்களும், 1000 துணை ஆய்வாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது சென்னையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார்.