ரூ.9.25 கோடி பாக்கி... தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்ட டீசல் பங்க் உரிமையாளர்கள்!
நாகர்கோவில்: அரசு பஸ்களுக்கு டீசல் வழங்கிய பாக்கி ரூ.9.25 கோடி இருப்பதால் ஆத்திரமடைந்த டீசல் பங்க் உரிமையாளர்கள் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தின்கீழ் 13 பணிமனைகள் இயங்குகின்றன. இங்கிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு பல்வேறு டீசல் பங்குகளில் டீசல் நிரப்பப்படுகிறது. இங்கு நிரப்பப்படும் டீசலுக்கு உரிய பணத்தை உடனடியாக போக்குவரத்து கழகம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
ஆகமொத்தம், சுமார் ரூ.9.25 கோடி கடன் பாக்கி உள்ளதாம். பொறுத்து பொறுத்து பார்த்த டீசல் பங்க் உரிமையாளர்கள், இன்று மதியம் திடீரென நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் குவிந்தனர். அங்கிருந்த மேலாளரை முற்றுகையிட்டு டீசல் பாக்கி தொகையை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர்.