5ஆவது நாளாக உயரும் பெட்ரோல்- டீசல் விலை... அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறுமா?.. அச்சத்தில் மக்கள்
Recommended Video
சென்னை: தொடர்ந்து 5-ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.63 ஆக உள்ளது. இதனால், இறக்குமதியாகும் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ,78-ஆகவும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.69.46 -ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.73.54 க்கு விற்பனையாகிறது. அதுபோல் பெட்ரோலின் விலை ரூ.81.09 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகளும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்றைய பெட்ரோல் விலை ரூ. 81.35, டீசல் விலை ரூ.73.88 ஆக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.