ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கலன்றே புதிய அணியை அறிவித்து கதிகலக்கிய தினகரன்!
ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நாளன்றே டிடிவி தினகரன் தனது புதிய அணியை அறிவித்து அதிமுகவினரை அதிர வைத்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டை அணிகள் இணைப்பிற்கு பின்னர் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த நிலையில் அதே நேரத்தில் தனது கட்சியின் அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளார் டிடிவி. தினகரன்.
அதிமுக என்னும் கோட்டை சசிகலா குடும்பத்தை விட்டு நழுவிச் சென்றதற்கு முக்கிய காரணம் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக முதன்முதலில் எதிர்ப்புக் குரலை கொடுத்தவர் ஓபிஎஸ். 2017, பிப்ரவரி 7ல் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் இருந்த ஓபிஎஸ் தியானத்தின் முடிவில் சசிகலாவிடம் இருந்து அதிமுகவை மீட்பேன் என்று சபதம் போட்டார்.
இதனால் முதன்முதலில் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக கூட்டில் குண்டு விழுந்தது. ஓ.பன்னீர்செல்வம் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறுவார் என்று சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நினைத்திருக்கவில்லை. கட்சியும்,ஆட்சியும் நமக்குத் தான் என்ற இருமாப்புடன் தில்லாக இருந்தார்கள்.
விலகிய அதிமுக பிடி
ஆனால் சசிகலா சிறை தண்டனை, தினகரன் மீது தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இவர்களது பிடி விலகியது. முதல்வர் பழனிசாமியை தாங்கள் தான் தேர்வு செய்தோம் அவர் எங்களுக்கு எதிராக செயல்படமாட்டார்கள் என்றெல்லாம் கூறி வந்தனர்.
தினகரனுக்கு எதிராக கைகோர்ப்பு
காட்சிகள் மாறின ஆகஸ்ட் மாதத்தில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரனை கட்சியை விட்டு விலக்கி பொதுக்குழுவில் தீர்மானம் போட்டனர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும். அதுவரை எதிர் எதிர் அணிகளாக செயல்பட்ட இவர்கள் இருவரும் சேர்ந்து சசிகலா குடும்பத்தை எதிர்க்கத் தொடங்கினர்.
முக்கிய காரணமாக இருந்த ஓபிஎஸ்
தினகரனை கட்சியில் இருந்து நீக்கிய கையோடு சசிகலாவிற்கு கட்சியில் கொடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியையும் பிடுங்கினர். அதிமுகவில் என்றுமே ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அறிவித்தனர். சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுக நழுவிப்போக முக்கிய காரணமாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
அணிகள் இணைந்த பின்
இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று அணிகள் இணைப்பிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கிய அதே நேரத்தில் மதுரை மேலூரில் டிடிவி. தினகரன் தனது புதிய அணியின் பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
அதிர வைத்த தினகரன்
மதுரை மேலூரில் நடந்த இந்த புதிய அணி அறிமுக கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கூடி இருந்த மக்களின் கூட்டம், அதிமுகவினரை கதிகலங்க வைத்துள்ளது. அதிமுகவை கைப்பற்றும் வரை தேர்தலுக்கான அடையாளமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தினகரன் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.