சசி மீதான நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்கே நகர் வெற்றி-இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவின் புது அக்கப்போர்
இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, தமது ஃபேஸ்புக் பக்கத்தில், சசிகலா மீதான நம்பிக்கைக்கான சான்று ஆர்கே நகர் வெற்றி என பதிவிட்டு கொளுத்திப் போட்டிருக்கிறார்.
சென்னை: ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றாலும் சசிகலா குடும்பத்துக்குள்ளான அதிகாரப் போட்டி பட்டவர்த்தமானதாகவே அம்பலப்பட்டு நிற்கிறது. தினகரனின் வெற்றியை ஜீரணிக்க முடியாத இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, தமது ஃபேஸ்புக் பக்கத்தி இது சசிகலா மீதான நம்பிக்கைக்கான சான்று என பதிவிட்டு கொளுத்திப் போட்டிருக்கிறார். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
தினகரனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முறைத்துக் கொண்டு நின்ற இளவரசி மகன் விவேக், ஜெயா டிவியில் தினகரனை ஆதரித்து செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டார்.
நாமும் எப்போது அரசியலில் ஜொலிக்கப் போகிறோமோ என்கிற ஆதங்கத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக் பதிவுகளில் திருப்தியடைந்து வருகிறார். ஆனால் இன்னொரு ஜெயலலிதா நாமே என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் கிருஷ்ணப்பிரியா விடுவதாக இல்லை போல.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ரிலீஸ் விவகாரத்தில் தினகரன் மீது கோபத்தை மறைமுகமாக காட்டியிருந்தார் கிருஷ்ணப்பிரியா. இப்போது ஆர்கே நகரில் தினகரன் வென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை போல்..
தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிகைக்கு சான்றுதான் RK நகர் தேர்தல் முடிவுகள் என பதிவிட்டிருக்கிறார் கிருஷ்ணப்பிரியா. வழக்கம் போல அவரது அடிப்பொடிகள் சூப்பர் அக்கா என கமெண்ட்ஸ் கொடுக்க, தினகரன் கோஷ்டியோ முறைப்புடன் பதில் கொடுத்து வருகின்றன.
இதுவும் அக்கப்போர்!