ஜெயானந்த் கொளுத்திப் போட்ட தீ-ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தையும் பாடாய்படுத்தும் ’ஜெ. சிகிச்சை சிடி’
திவாகரன் மகன் ஜெயானந்த் ஜெயலலிதா சிகிச்சை சிடி இருக்கிறது என கூறியதுதான் ஐடி ரெய்டுக்கு காரணம் என குமுறுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை சிடி இருப்பதாக திவாகரன் மகன் ஜெயானந்த் கொளுத்திப் போட்ட ஃபேஸ்புக் பதிவால் இப்போது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியிருக்கிறது என குமுறுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
திவாகரனும் தினகரனும் ராசியாகிவிட்டோம் என என்னதான் கூறிவந்தாலும் இருதரப்புக்குமான புகைச்சல் குறைந்தபாடில்லை. இப்போது சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 355 பேர் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கி உள்ளனர்.
ரெய்டில் திவாகரன்
குறிப்பாக இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் 5 நாட்களாக வருமானவரித்துறையின் பிடியில் உள்ளனர். திவாகரனின் கல்லூரியிலும் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
ஜெ. சிகிச்சை சிடி
வருமான வரித்துறை வட்டாரங்களோ, போலி நிறுவனங்களின் பெயரில் கருப்புப் பண பரிமாற்றம் நடந்தது என்பதால்தான் இந்த சோதனை என்கிறது. ஆனால் தினகரன் தரப்போ, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிடியைத்தான் தேடுகிறார்கள் என்கிறது.
அப்போது ஆதரவு
அதேநேரத்தில் இந்த சிடி விவகாரத்தை திவாகரன் மகன் ஜெயானந்த் பேசாமலேயே இருந்திருக்கலாம். அவர் பேஸ்புக்கில் போட்ட பதிவை ஆமாம் என பேச வேண்டிய நிலை சசிகலா குடும்பத்துக்கு உருவானது.
அலட்டாத திவாகரன் தரப்பு
ஜெயானந்த் அந்த பதிவை தவிர்த்திருந்தால் இப்படி பிரளயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்காது என வழக்கம் போல திவாகரன் குடும்பம் மீது பழியை போடுகிறது தினகரன் தரப்பு. ஆனால் திவாகரன் தரப்போ இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமலே இருக்கிறதாம்.