மீண்டும் விண்ட் பிளவர் விடுதிக்கே இடம்மாறும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள்
தற்போது புதுவை சன்வே ஹோட்டலில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் நாளை முதல் மீண்டும் விண்ட் பிளவர் விடுதிக்கே செல்லவுள்ளனர்.
புதுச்சேரி: புதுவை நெடுஞ்சாலையில் உள்ள சன்வே ஹோட்டலில் தங்கி "ஓய்வெடுக்கும்" தங்கதமிழ் செல்வன் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் நாளை முதல் மீண்டும் விண்ட் பிளவர் விடுதிக்கே செல்லவுள்ளனர்.
அதிமுக இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி புதுவை சின்ன வீரானம்பட்டினத்தில் உள்ள விண்ட் பிளவர் விடுதியில் கடந்த 4 நாள்களாக தங்கியிருந்தனர். அங்கு சீசா விளையாடுவது, ஊஞ்சல் விளையாடுவது, கைபந்து விளையாடுவது உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர்.
சன்வே ஹோட்டலுக்கு ஷிப்டிங்
இதைத் தொடர்ந்து புதுவை நெடுஞ்சாலையில் உள்ள சன்வே ஹோட்டலுக்கு இடம்மாறினர். இந்நிலையில் இன்று ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் விண்ட் பிளவர் விடுதிக்கே திரும்பி சென்றுவிட்டார்.
மீண்டும் விண்ட்பிளவர்
இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் மீண்டும் விண்ட் பிளவர் விடுதியிலேயே தங்கியிருப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி நாளை மதியம் சன்வே ஹோட்டலில் இருந்து அவர்கள் அனைவரும் விண்ட் பிளவருக்கு செல்கின்றனர்.
ஆளுநர் அழைக்கும் வரை
இதற்காக ஹோட்டலில் 22 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் அழைக்கும் வரை இந்த ஹோட்டலிலேயே தங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏன் மாற்றம்
கூவத்தூரில் தங்கியிருந்தபோது அதே ரிசார்ட்டில்தான் கடைசி வரை தங்கியிருந்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள். ஆனால் தற்போது புதுச்சேரியில் 2 விடுதிகளுக்கு மாறி மாறிப் போய்க் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.