தினகரனை விட்டு தப்பி ஓடும் எம்.பி.க்கள்.. அடுத்தது எம்.எல்.ஏக்கள்? காலியாகிறது கூடாரம்?
தினகரன் கூடாரத்தை விட்டு எம்எல்ஏக்கள் தப்பி ஓட உள்ளதால் அந்த கூடாரம் விரைவில் காலியாக உள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுக கட்சி, கொடி, சின்னம் எதுவும் இல்லாத தினகரன் முகாமைவிட்டு எம்.பி.க்கள் அடுத்தடுத்து தாவ தொடங்கிவிட்டனர். இனி எம்.எல்.ஏக்களும் தாவுகிற படலம் அரங்கேறினால் ஒட்டுமொத்தமாக தினகரன் கூடாரமே காலியாகிவிடும் என்றே தெரிகிறது.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் தினகரனுக்கு முதல்வர் ஆசை முளைத்தது. இதனால் ஆர்கே நகரில் போட்டியிட்டு பணத்தை வாரி இறைத்தார்.
திடீர் அமைதி
ஆனால் தினகரன் திஹார் சிறைவாசத்தைத்தான் அனுபவிக்க நேர்ந்தது. அதன்பின்னர் சற்று அமைதியாக இருந்தார் தினகரன். அதற்குள் சசிகலா, தினகரன் என ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பத்தையே அதிமுக ஓரம்கட்டிவிட்டது.
இரட்டை இலை சின்னம்
இதனால் விரக்தியடைந்த தினகரன் தரப்பு வேறுவழியே இல்லாமல் அதிமுக (அம்மா) கட்சியை தூசு தட்டியது. என்னதான் நடக்கும் பார்க்கலாம் என முட்டி மோதிப் பார்த்தது.. ஆனால் கடைசியாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு என அறிவித்துவிட்டது.
எம்.எல்.ஏக்கள் ஜூட்
இதோ உச்சநீதிமன்றம் போகிறேன்; அதோ போகிறேன் என தினகரன் தரப்பு உதார்விட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் அவரது வசம் இருந்த எம்.பிக்கள் அப்படியே ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிக்கு தாவ தொடங்கிவிட்டனர். ஏற்கனவே தினகரனை நம்பி எம்எல்ஏ பதவியை பறிகொடுத்த 18 பேரில் சிலர் இப்போது சமாதான படலத்தைத் தொடங்கியுள்ளனராம்.
கூண்டோடு தாவல்
ஆகையால் தினகரன் கூடாரத்தில் இருந்து அனேகமாக பல எம்.எல்.ஏக்கள் கூண்டோடு இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு தாவ வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சி, அரசியலே வேண்டாம்.. தொழிலைப் பார்க்கலாம்.. டெல்லியுடன் பகை எதற்கு என தினகரனுக்கு சொந்தங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் நம்பி வந்த எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் நட்டாற்றில் விட்டுச் செல்வதால் தினகரன் தரப்பு திக்கு தெரியாத காட்டில் நிற்பதாகவே கூறப்படுகிறது.