சசிகலாவிடம் 'முதலில் போட்டு கொடுப்பது யாரு?' மல்லுக்கட்டும் மன்னார்குடி மாமா- மருமகன்!
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனும் திவாகரனும் முயற்சித்து வருகின்றனர்.
சென்னை: பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து குடும்ப அக்கப்போரை முதலில் தெரிவிப்பது யார் என்பதில் தினகரன், திவாகரன் தரப்பு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை, ஆறு நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார் விவேக் ஜெயராமன். இந்த சந்திப்பில் குடும்ப விவகாரம், கணக்கு வழக்குகள் என அனைத்தையும் விவரித்தார். கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் குடும்ப மோதல்கள் குறித்து சசிகலாவின் கவனத்துக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
' சசிகலாவை ஒருமுறையாவது சிறைக்குச் சென்று சந்தித்திருப்பாரா திவாகரன்?' எனக் கேள்வி எழுப்பினார் தினகரன். இதற்குப் பதில் கொடுத்த திவாகரன், 'அவரைச் சிரமப்படுத்த விரும்பவில்லை. இப்போது நடக்கும் விஷயங்களைப் பற்றி அவரைச் சந்தித்து தெரிவிப்போம்' எனப் பேசினார்.
சசியை சந்திக்க தீவிரம்
இதையடுத்து, சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார் திவாகரன். அதேநேரம், தினகரனும் சந்திப்புக்கு அனுமதி கேட்டிருக்கிறார். "இருவருக்கும் சந்திப்புக்கான அனுமதியைக் கொடுத்துவிட்டு, கூடுதல் மனஉளைச்சலைப் பெறுவதற்கு சசிகலா தயாராக இல்லை" எனக் கூறும் டெல்டா மாவட்ட சசிகலா ஆதரவாளர் ஒருவர், " பரோலில் சசிகலா வந்தபோது, அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர் தினகரனும் அனுராதாவும். இதனால், திவாகரன் சொல்ல விரும்பிய தகவலைக்கூட வெளிப்படையாகப் பேச முடியவில்லை.
சசியிடம் போட்டுக் கொடுத்த தினகரன்
தஞ்சை பரிசுத்தம் நகரில் இருந்த நடராஜன் வீட்டில் மிகுந்த வருத்தத்துடன்தான் வந்து போய்க் கொண்டிருந்தார் திவாகரன். ஆட்சியில் உள்ளவர்களோடு திவாகரன் தரப்பினரின் தொடர்புகளையும் சசிகலா கவனத்துக்கு எடுத்துச் சென்றார் தினகரன்.
அதிமுக பிடி போகும்- திவாகரன் எதிர்ப்பு
'நமக்குத் துரோகம் செய்தவர்களோடு ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார். நம்மை மக்கள் ஆதரிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தால்தான் நாம் வளர முடியும்' என சசிகலாவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். ஆனால், திவாகரனோ, ' தனிக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க மீதான நமது பிடி நழுவிவிடும். தொண்டர்களும் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில விஷயங்களில் அனுசரித்துச் செல்வதே ஆரோக்கியமாக இருக்க முடியும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்திருக்கிறோம். தனிக்கட்சி தொடங்குவதால் எந்தப் பலனும் இல்லை' எனக் கூறினார்.
சசிகலாவிடம் கட்ட பஞ்சாயத்து
இந்த வார்த்தைகளை தினகரன் விரும்பவில்லை. இப்போது மோதல் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளதால், இருவருமே சசிகலாவை சந்திக்க விரும்புகின்றனர். ' குடும்ப உறவுகள் ஒற்றுமையாக இருந்தால்தான் எதிர்காலத்துக்கு நல்லது எனப் பலமுறை அறிவுறுத்தியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் மத்தியில் நமக்கான கெட்ட பெயரை அதிகரிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா. வரும் நாட்களில் யாரைச் சந்திப்பதற்கு அவர் முன்னுரிமை கொடுக்கிறார் என்பதைப் பொறுத்து சசிகலாவின் உள்ளக் குமுறலைப் புரிந்து கொள்ளலாம்" என்கிறார்.
மாமாவா? சித்தப்பாவா?
"சிறுவயதில் இருந்தே தூக்கி வளர்த்த சித்தப்பா என்பதால், திவாகரன் மீது அதீத பாசத்தில் இருக்கிறார் விவேக். அவரைச் சந்தித்துப் பேசினால், மாமா தினகரன் கோபித்துக் கொள்வார் என்பதால் அமைதியாக இருக்கிறார். ' எந்தப் பக்கம் சாய்ந்தாலும் நமக்குக் கெட்ட பெயர் வரும். அப்படியொரு வாய்ப்பை நாம் ஏன் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சின்னம்மா சொல்வதைக் கேட்டு நடப்போம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால்தான், யாருக்கும் அவர் பதில் கொடுப்பதில்லலை" என்கின்றனர் ஜாஸ் சினிமாஸ் வட்டாரத்தில்.