ஆளே இல்லாத ஊரில் கச்சேரி நடத்துகிறார் தினகரன்.. ஜெயக்குமார் விளாசல்
இரட்டை இலை விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இரட்டை இலையை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான வழக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி புறப்படும் முன்பாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அனைத்து ஆவணங்களும் தங்கள் தரப்பிடம் தான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நியாயம், தர்மம் என அனைத்தும் தங்கள் பக்கமே உள்ளதால் நிச்சயமாக இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இரட்டை இலைச் சின்னம் 100 சதவீதம் தங்களுக்குதான் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இரட்டை இலைச்சின்னம் விவகாரத்தில் டிடிவி தினகரன் காற்றில் கத்தி வீசிக்கொண்டிருக்கிறார் என்றும் ஆளே இல்லாத ஊரில் தினகரன் கச்சேரி நடத்துகிறார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.