2017ம் ஆண்டை கலக்கியவர் தினகரன்... ஒன்இந்தியா தமிழ் சர்வேயில் சுவாரஸ்யம்!
2017ஆம் ஆண்டு செய்தி உலகை கலக்கிய அரசியல்வாதி டிடிவி தினகரன் என்று ஒன் இந்தியா தமிழ் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை: ரெய்டு நடந்தாலும் அசால்ட் ஆறுமுகமாய் எதிர்கொண்ட விதம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாய் குக்கரில் போட்டியிட்டு ஆளும் கட்சி, எதிர்கட்சியை தெறிக்கவிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் நியூஸ் மேக்கர் நம்பர் 1 ஆக இடம் பெற்றுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அடக்கி வாசித்த டிடிவி தினகரன், அவரது மறைவிற்குப் பின்னர் லைம் லைட்டிற்கு வந்தார்.
சசிகலாவும் சிறைக்குப் போகவே, தினகரனுக்கு அடித்தது ஜாக்பாட், அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டார். டென்சனான நேரத்திலும் தினகரன் கொடுத்த கூல் பேட்டிகள் கமலையே பின்னுக்குத்தள்ளிவிட்டது.
தொப்பி நாயகன்
தினகரனுக்கு தோதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரவே தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். பணப்பட்டுவாடா புகாரினால் தேர்தல் ரத்தானது. ஆனாலும் அசரவில்லை தினகரன்.
ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன்
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை இணைவதற்காக கட்சியில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தனர். இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் திகார் சிறைக்கு சென்றார் தினகரன்.
ஆகஸ்ட் முதல் அதிரடி
திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தாலும் 60 நாட்கள் அமைதியாக இருந்த தினகரன்,கடந்த ஆகஸ்ட் முதல் அதிரடியாகவே களமிறங்கினார். அதிமுக அணிகள் இணையவே, தினகரனுக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் கை கோர்த்தனர். மதுரை மேலூரில் மாநாடு போட்டு ஆளுங்கட்சிக்கு எதிராக மாஸ் காட்டினார்.
எம்எல்ஏக்கள் சிறை
கூவாத்தூரில் எம்எல்ஏக்களை சிறை வைத்த சசிகலா குடும்பம், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக 20 எம்எல்ஏக்கள் களமிறங்கினர். அவர்களை பாக்கெட் செய்து குடகு ரிசார்ட்டில் தங்கவைத்து ஆட்டம் காட்டினார் தினகரன். ஆளுநரை சந்தித்து ஆட்சிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பினார்.
வருமான வரி சோதனை
நவம்பர் மாதம் டிடிவி தினகரன், சசிகலா குடும்ப உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் மிகப்பெரிய அளவில் வருமான வரி சோதனை நடந்தது. அதனை தினகரன் கையாண்ட விதம், அடேங்கப்பா என்று பேச வைத்தது.
நியூஸ் மேக்கர்
டிடிவி தினகரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. கரெக்டாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் வந்தது. இரட்டை இலையில் ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனன் போட்டியிட தினகரனே குக்கரில் போட்டியிட்டார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி வேட்பாளர்களின் பிரசரை எகிறவைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு தினகரன் கொடுத்த விலை அதிகம் என்கின்றனர்.
கருத்துக்கணிப்பு
2017ஆம் ஆண்டின் நியூஸ் மேக்கர் யார் என்று ஒன் இந்தியா தமிழ் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில்
14111 வாக்குகள் பெற்றுள்ளார். ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் 33 சதவிகிதம் பேர் டிடிவி தினகரனுக்கு வாக்களித்துள்ளனர். கமல், அனிதா உள்ளிட்ட பலரையும் பின்னுக்குத்தள்ளிவிட்டார் தினகரன். சட்டசபையில் தனி ஒருவனாக சென்று கலக்கி வருகிறார். ஊடக வெளிச்சத்தில் அதிகம் இடம் பெறுகிறார் டிடிவி தினகரன்.