குழுமூர் வந்த தினகரனுக்கு எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் அனிதாவிற்கு அஞ்சலி
அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த டிடிவி தினகரனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. போலீஸ் பாதுகாப்புடன் வந்து தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
அரியலூர்: அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கமிட்டனர். எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் வந்து தினகரன் அஞ்சலி செலுத்தினார்.
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா மருத்துவ கனவு கலைந்து போன மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான குழுமூரில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள், திரை உலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக குற்றம் சாட்டிய டிடிவி தினகரன் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றார். இதற்கு வி.சி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தினகரனுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வந்து அனிதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் டிடிவி தினகரன். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாதுகாப்புடன் அங்கிருந்து தினகரன் செல்ல உதவினார்.