ஜனாதிபதி தேர்தல்: தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு வாக்களிக்க திட்டம்?
ஜனாதிபதி தேர்தலுக்கான இன்றைய வாக்குப் பதிவில் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கடைசிநேரத்தில் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீராகுமாரை ஆதரித்து வாக்களிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்ட உடனேயே அதிமுகவின் எடப்பாடி, ஓபிஎஸ் கோஷ்டிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவை தெரிவித்தன. அதேநேரத்தில் தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
தினகரன் எதிர்ப்பு
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார். அப்போது, தங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் பாஜகவுக்கு பாடம் புகட்ட காங்கிரஸ் வேட்பாளரை நாம் ஆதரிக்கலாம்; இதுவரை பாஜகவினர் நம்மை மதித்து ஆதரவு கேட்கவில்லை என பொங்கினார்.
தம்பிதுரை அறிவிப்பு
ஆனால் சசிகலாவோ அப்படியெல்லாம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம் என தடுத்துவிட்டார். அத்துடன் தம்பிதுரை மூலமாக பாஜகவுக்கே ஆதரவு என அறிவிக்கவும் செய்தார்.
காங்கிரஸுக்கு வாக்கு?
இருப்பினும் அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது குடும்பம் கைப்பற்ற விடாமல் பாஜக தடுத்து வருகிறது. இதனால் அந்த கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
Recommended Video
நம்பிக்கை இல்லா தீர்மானம்
அப்படி தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தால் ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகங்களில் திமுக முழு வீச்சில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.