ஜெயா டிவியை மீண்டும் கைப்பற்றியது தினகரன் குடும்பம்! விட்டுத்தர விவேக் மறுப்பு!
ஜெயா டிவியை தினகரன் குடும்பம் மீண்டும் கைப்பற்றியதால் சர்ச்சை வெடித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் குடும்பம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. ஆனால் சிஇஓ பதவியை விவேக் விட்டுத்தர மறுப்பதால் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் மனைவி அனுராதா நீண்டகாலமாக கவனித்து வந்தார். ஜெயா டிவியில் உதவியாளராக இருந்த ஜனாதான் தினகரனுக்கு எல்லாமுமாக இப்போது வரை இருந்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டிவியை இளவரசி மகன் விவேக் கையிலெடுத்தார். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் ஜெயா டிவி நிர்வாகத்தில் தலையிட்டு வந்தார்.
தினகரன் தரப்பு தீவிரம்
அதேபோல் நமது எம்ஜிஆர் நாளிதழும் இளவரசி குடும்பத்தின் பிடியில் இருந்தது. தினகரனுடன் இளவரசி குடும்பத்துக்கு மோதல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் நிர்வாகங்களை கைப்பற்ற தினகரன் தரப்பு தீவிரமாக களம் இறங்கியது.
மீண்டும் தினகரன் குடும்பம் வசம்
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் இது தொடர்பான பஞ்சாயத்தும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தினகரன் மனைவி அனுராதா ஜெயா டிவி அலுவலகத்துக்கு சென்று வருகிறார். இது இளவரசி குடும்பத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஆல் இன் ஆல் ஜனா
தினகரன் குடும்பத்தின் தலையீட்டை விரும்பாத விவேக், ஜெயா டிவியின் சிஇஓ பதவியை விட்டுத்தர மறுத்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாராம். அனுராதாவுடன் தினகரனின் ஆல் இன் ஆல் ஜனாவும் ஜெயா டிவியில் மீண்டும் கோலோச்ச தொடங்கியுள்ளனர்.
மோதல் உச்சகட்டம்
இதன் முதல் கட்டமாக செய்திப் பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இந்நடவடிக்கைகளால் தினகரன் மற்றும் இளவரசி குடும்பம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாம்.