Exclusive: டிடிவி தினகரன் ஒரு எரிமலை.. எச்சில் துப்பி அதை அணைக்க முடியாது.. நாஞ்சில் சம்பத் ஆவேசம்
பன்னீர் செல்வம் துரோகியாக செயல்பட்டு அதிமுகவை உடைத்துவிட்டார். அதிமுகவை வழி நடத்த வந்த தலைவர் தினகரன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
மதுரை: ஆகாயத்தை போல் அப்பழுக்கற்றவர் தினகரன். தினகரன் என்னும் எரிமலையை எச்சில் துப்பி எதுவும் செய்ய முடியாது என மதுரையில் தினகரன் கைதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
மதுரையில் தினகரன் கைதை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்துக்கு பிறகு நாஞ்சில் சம்பத் ஒன் இந்தியாவுக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி: ''அதிமுக ஒரு அசாதாரணமான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்றாலும் அதுதான் உண்மை. இந்தக் கட்சியை காப்பாற்றுவதற்கு கடமைப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இதனை காட்டிக்கொடுக்க முன் வந்தார். யூதாஸ்களும் எட்டப்பன்களும் வரலாற்றில் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு பன்னீர்செல்வம் சமகால சாட்சி.
ஒருவீட்டில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கை நனைத்தால் காலமெல்லாம் அவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்று நினக்கும் பண்பட்ட சமூகத்தில், பெரிய குளத்தில் ஒரு தேநீர் கடை வைத்திருந்தவரை அரசியலுக்குக் கொண்டு வந்து ஆளாக்கி, முதலமைச்சர் என்ற பெரிய பதவியில் உட்கார வைத்த கட்சிக்கு எப்படித்தான் துரோகம் செய்ய மனம் வந்தது என தெரியவில்லை.
பன்னீர்செல்வம் வெளிச்சத்துக்கு ஆயுள் குறைவு
இன்றைக்கு அந்த துரோகத்துக்கு வெளிச்சம் கிடைத்தாலும் அந்த வெளிச்சத்தின் ஆயுள் குறைவு. கோடிக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு கண்ட இயக்கம் அதிமுக. ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டுகிடந்த மக்களுக்கு 69 சதவித இட ஒதுக்கீட்டைப் பெற்று தந்து, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர் ஜெயலலிதா.
பன்னீர் செல்வம் துரோகி
இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய கட்சியை காட்டிக்கொடுக்க, மூன்று முறை முதலமைச்சர் பதவியை அனுபவித்த துரோகி முன்வந்துள்ளார். இதை முறியடித்துத் தீருவது என்று டிடிவி தினகரன் தலைமையில் வேள்வி தொடங்கியுள்ளோம். செய்யாத குற்றத்துக்கு அவர் மீது பொய் வழக்கைத் தொடங்கி அவரை திகார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர் சிறைச்சாலையில் நிலாச் சோறு உண்டுகொண்டிருக்கிறார்.
வெந்நீர் .. பன்னீர்
அதிமுக என்ற ஆளுமை மிகுந்த கட்சியை தினகரனால் தான் வழி நடத்த முடியும் என நம்பினோம். இருண்டு கிடக்கிற இதயங்கள் தினகரனால் வெளிச்சம் அடையும் என நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் காலம் காலமாக எங்கள் மீது வெந்நீர் ஊற்றிக்கொண்டிருப்பவர்கள், பன்னீரை வைத்து இந்தக் கட்சியை உடைத்து விட்டார்கள்.
நாங்க நடத்துவதுதான் தர்மயுத்தம்
ஒரு சிலர் விலகி செல்வதாலோ, தனித்து இயங்குவதாலோ ஒரு மிகப் பெரிய இயக்கத்திற்கு எந்த ஆபத்தும் சேதாரமும் வந்துவிடாது. தர்மயுத்தம் என்று பன்னீர் செல்வம் சொல்வது பாஜகவிடம் அவர் பெற்றுக் கொண்ட கைக் கூலிக்காக அவர் உளறுகிறார். ஆனால் தர்ம யுத்தம் நாங்கள் தான் நடத்திக்கொண்டிருக்கிறோம்.
தினகரனை மீட்கும் வரை ஓய்வும் இல்லை... உறக்கமும் இல்லை
ஒரு திராவிட கட்சியை காக்க வந்த தலைவன் மீது பொய் வழக்குப் போட்டு திராவிடக் கட்சி மீது அறிவிக்கப்படாத போர் நடத்தியிருக்கிறது, திகார் சிறையில் தள்ளி இருக்கிறது டெல்லி ஏகாதிபத்திய அரசு. தினகரனை மீட்டு மீண்டும் தனது பதவியையும் ஆட்சியையும் மீட்கும் வரை எங்களுக்கு ஓய்வும் இல்லை. உறக்கமும் இல்லை.
கழகம் விசுவரூபமெடுக்கும்
இனதுரோகிகளை அம்பலப்படுத்துவது மட்டுமில்லை. கழகம் மீண்டும் விசுவரூபமெடுத்து பிரமாண்டமாக வரும் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்டக்காங்கைகள் தினகரனை அழுக்காக முடியாது
இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றார் என பொய் வழக்கு போட்டுள்ளனர். முயற்சி செய்தார் என வழக்குப் போட்டது இந்தியாவிலேயே இதுதான் முதன் முறை. வாங்க முயற்சித்தவர் யார் என அவர்களால் சொல்ல முடியவில்லை. தினகரன் ஆகாயத்தைப் போல அப்பழுக்கற்றவர். அண்டங்காக்கைகள் அவரை அழுக்காக்க முடியாது.
அவர் ஒரு எரிமலை
டிடிவி தினகரன் எரிமலை. எச்சில் துப்பி அவரை எதுவும் செய்ய முடியாது. டிடிவி தினகரன் எங்கள் வானம். குச்சிகள் பட்டு வானம் கிழிந்துவிடாது. மேலூர், மதுரையில் எங்கள் அறப்போராட்டத்தை நடத்தினோம். அதுபோல் தேவகோட்டையில் நடத்த உள்ளோம்.தினகரனை மீட்கும்வரை எங்கள் அறப்போர் தமிழகம் முழுவதும் தொடரும்'' என நாஞ்சில் சம்பத் கூறினார்.