தினகரன் தனி 'அமைப்பு' இன்று தொடங்குகிறார்.. கொடியும் அறிமுகம்!
தினகரன் இன்று தமது அமைப்பின் பெயரை அறிவிக்கிறார்.
Recommended Video
மதுரை: ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் இன்று தனி அமைப்பு மற்றும் அதற்கான கொடியை அறிவிக்க உள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் முதல்வர் நாற்காலியில் அமரவும் முயற்சித்தார்.
ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. அப்போது சசிகலா தமது அக்கா மகன் தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலர் என நியமித்தார்.
இணைந்த கைகள்
தினகரனும் இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் கை கோர்த்தன.
ஆர்கே நகர் எம்.எல்.ஏ. தினகரன்
முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவு கொடுத்த 12 எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சையாக தினகரன் வென்றார்.
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தினகரன் கேட்கும் குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மேலும் தினகரன் கேட்கும் பெயரில் தனி கட்சி தொடங்கவும் அனுமதி அளித்தது.
தனிக்கட்சிக்கு எதிர்ப்பு
இதனால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக தினகரன் அறிவித்தார். ஆனால் தினகரனின் தனிக்கட்சிக்கு அவரது ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் 'தற்காலிகமாக' ஒரு தனி அமைப்பையும் அதற்கான கட்சியையும் அறிமுகப்படுத்துவதாக தினகரன் பல்டி அடித்தார்.
தனி அமைப்பு பெயர் அறிவிப்பு?
மதுரை மேலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் தினகரன் தனி அமைப்பின் பெயரை அறிவித்து கட்சியின் கொடியையும் அறிவிக்க உள்ளார். இன்றைய கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி தமது வலிமையை நிரூபிக்க முயற்சித்து வருகிறாராம் தினகரன்.