என்னது சிடி கேட்டாங்களா? திவாகரன் பொய் மூட்டையை அவிழ்த்து விடுவதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சாடல்
ஜெயலலிதா சிகிச்சை சிடியை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாக திவாகரன் கூறுவது பொய் என்கிறார் புகழேந்தி.
சென்னை: வருமான வரி சோதனையின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிடி எங்கே என கேட்டதாக திவாகரன் கூறியிருப்பதற்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ம்றுப்பு தெரிவித்துள்ளார்.
சசிகலா உறவினர்கள் மற்றும் கர்நாடகா மாநில அதிமுக (அம்மா) அணி செயலாளர் புகழேந்தி உட்பட 355 பேரிடம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது இந்த வருமான வரி சோதனை.
இச்சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், வருமான வரி சோதனைகளால் எங்களை பணிய வைக்க முடியாது; எந்த ஒரு மிரட்டலுக்கும் நாங்கள் அடிபணியமாட்டோம். வருமான வரி சோதனை நடைபெற்ற பல இடங்களில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான சிடி இருக்கிறதா? என கேட்டிருக்கிறார்கள். என்னிடம் எதுவும் கேட்கவில்லை என கூறியிருந்தார்.
ஆனால் இதை வருமான வரி சோதனைக்குள்ளான பெங்களூரு புகழேந்தி கடுமையாக் மறுத்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் அப்படியான எந்த ஒரு கேள்வியுமே கேட்கவில்லை. பொய் கதைகளை புனைய வேண்டாம் என சாடியிருக்கிறார்.
ஏற்கனவே வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கதறியிருந்தார் தினகரன். ஆனால் வருமான வரி சோதனைக்குள்ளான விவேக், கிருஷ்ணப்பிரியா இருவருமே, அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்தனர்; இதில் அரசியல் பழிவாங்கல்; அரசியல் உள்நோக்கம் எதுவுமே இல்லை என நோஸ்கட் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.