ஆஹா.. இது லிஸ்ட்டிலேயே இல்லையே... இப்படி ஒரு டீல் ஓடுதாமே..!
Recommended Video
சென்னை: திமுக, அதிமுகவின் வியூகமெல்லாம் இனியும் பெரிய சுவாரஸ்யமே கிடையாது. இப்பெல்லாம் குட்டிப் பசங்கதான் இறங்கி அடித்து அசத்துகிறார்கள். அந்த வகையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் செமத்தியான வியூகம் போட்டு கலக்கிக் கொண்டிருப்பது அந்த இரண்டு பேருக்கும் முன்பு வேண்டப்பட்டவர்களான அழகிரியும், தினகரனும்தான்.
அழகிரியை, தனது தந்தை கருணாநிதி போலவே நேக்காக காய் நகர்த்தக் கூடியவர். அதிரடியான ஆள்தான், அடாவடியும் கூடத்தான். ஆனால் பிளானிங் பக்காவாக. மதுரை திமுககாரர்களைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். இதனால்தான் கருணாநிதியால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தார் அழகிரி. உண்மையில் கருணாநிதி படு விவரக்காரர். அழகிரியை கட்டுப்படுத்தாமல் அவர் விட்டதும் கூட கட்சிக்கு நல்லதுதானே செய்கிறார் என்ற எண்ணத்தில்தான் (சாணக்கியராச்சே.. சும்மாவா!)
இப்போது மேட்டர் அது இல்லை. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அழகிரி தனது பலத்தை நிரூபிக்க களம் குதித்துள்ளார். மறுபக்கம் தினகரன் களம் புகுந்துள்ளார். என்ன விஷயம் என்றால் இந்த இருவரும் மறைமுகமாக கை கோர்த்துள்ளனர் என்பதுதான். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் கை கோர்த்துள்ளனராம். இவர்களுக்கு அதிமுகவும் மறைமுக ஆதரவு.
நீ அங்கே நான் இங்கே
திருவாரூரில் நாங்க போட்டியிடுகிறோம், ஜெயிக்க வைங்க. திருப்பரங்குன்றத்தில் உங்களது வெற்றிக்கு நாங்க உத்தரவாதம்.. இதுதான் அழகிரி தரப்பிலிருந்து தினகரன் தரப்புக்கு போன தகவலாம்.
சரி யோசிக்கிறோம்
இதைக் கேட்டு தினகரனுக்கு குஷியாகி விட்டதாம். எங்களுக்கு திருப்பரங்குன்றத்தில் உதவினால் திருவாரூரில் உங்களுக்கு உதவ ஒரு சிக்கலும் இல்லை என்று கூறி விட்டார்களாம் தினகரன் தரப்பில். இதனால் அழகிரி தரப்பு சற்று ஆசுவாசமாகியுள்ளதாம்.
அடுத்து ஜாதி
அடுத்து தற்போது ஜாதி வாக்குகளை கணக்கெடுக்க ஆரம்பித்துள்ளது அழகிரி தரப்பு. அங்குள்ள தலித் மக்களின் வாக்கு வங்கியை அழகிரி வெகுவாக நம்புகிறதாம். அழகிரி மனைவி காந்தி தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் காந்தியை முகாமிட்டு மொத்த வாக்குகளையும் அப்படியே வழித்தெடுக்கும் திட்டம் உள்ளதாம். அதேபோல திமுகவுக்கு சாதகமில்லாத பிற ஜாதியினரையும் குறி வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனராம்.
துரை பார்த்துப்பார்
அழகிரி மகன் தயாநிதிதான் தேர்தல் முழுக் கவனத்தையும் திருப்பியுள்ளாராம். அப்பாவின் கெளரவம் இதில் உள்ளது என்பதில் துரை தயாநிதி படு தீவிரமாக உள்ளாராம். அதை விட ஸ்டாலின் குடும்பத்திற்கு பெரிய அடி கொடுக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளதாம். அவர் மட்டுமல்ல, மொத்த அழகிகரி குடும்பமும் ஸ்டாலின் தரப்பு மீது காட்டமாக உள்ளதால் படு தெளிவாகவும், அதேசமயத்தில் அதிரடியாகவும் திட்டமிட்டு வருகிறதாம். பார்க்கலாம் ஜெயிக்கப் போவது அண்ணனா இல்லை தம்பியா என்று.. !