அதிரடி முடிவை இன்று அறிவிப்பாரா தினகரன்?.. சூடாகிறது அரசியல் களம்!
சென்னை: தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகிறோம் என்று தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தினகரனும் இன்று செய்தியாளர்களிடம் பேசவுள்ளதாக அறிவித்துள்ளார். எனவே முக்கிய முடிவு எதையும் அவர் அறிவிப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலையெழுத்து தாறுமாறாகி, அலங்கோலமாகி மாதங்கள் பல ஓடி விட்டன. முடிவே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது மக்கள் கூட்டம். ஆனால் அரசியல்வாதிகளின் விளையாட்டுக்குத்தான் ஓய்வே இல்லை. புத்துணர்ச்சியோடு புதுப் புது விளையாட்டுக்களில் தொடர்ந்து களம் இறங்கி கலக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கூவத்தூர் சீசன் 2வை ஆரம்பித்து வைத்துள்ளது தினகரன் தரப்பு. புதுச்சேரியில் கொண்டு போய் தனது 19 ஆதரவு எம்எல்ஏக்களையும் பிரமாண்ட ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர்.
என்ன நடக்கப் போகிறது?
ஏன் திடீரென இவர்களை ரிசார்ட்டுக்குக் கொண்டு போய் தங்க வைக்க வேண்டும், மேலும் பலர் இதுபோல கொண்டு வரப்படுவார்களா, என்ன நடக்கப் போகிறது, அரசுக்கான ஆதரவை இவர்கள் வாபஸ் பெறப் போகிறார்களா, என்ன திட்டம் வைத்துள்ளனர் என்று பல கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளன.
உற்சாகத்தில் தினகரன் தரப்பு
உண்மையில் தினகரன் தரப்பு அதிர்ந்தோ அல்லது ஆடிப் போயோ இல்லை. மாறாக உற்சாகமாகவே காணப்படுகிறது. பொறுத்திருந்து பாருங்கள், அரசியலில் அதிரடியான முடிவுகளைப் பார்ப்பீர்கள். சும்மா விட்ருவோமா என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
நிறையப் பேர் வருவார்கள்
இப்போது 19 பேர் இருக்கிறோம். இன்னும் பலர் உள்ளனர். தேவைப்படும்போது அவர்களும் வெளியே வருவார்கள். பொறுத்திருந்து பாருங்கள் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இவர்தான் இப்போது எம்.எல்.ஏக்களுக்கு லீடர் போல ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பேசுவாரா தினகரன்?
இரு அதிமுக அணிகள் இணைந்தது முதல் தினகரன் அமைதி காத்து வருகிறார். டிவிட்டரில் மட்டும் கருத்து தெரிவித்திருந்தார். தனக்கு தொண்டை வலி என்பதால் இன்று பேசுவதாக கூறியிருந்தார். எனவே இன்று செய்தியாளர்களை தினகரன் சந்திக்கலாம் என்று தெரிகிறது. அப்போது ஏதாவது பரபரப்பான முடிவை அறிவிப்பாரா அல்லது பொறுத்திருந்து பாருங்கள் என்று பூடகமாக கூறுவாரா என்பதை நாமும் பொறுத்திருந்தே பார்ப்போம்.. வேற வழி!