தினகரன் அணியில் 40 எம்எல்ஏக்கள் உள்ளனர்.. பகீர் கிளப்பும் தங்க தமிழ் செல்வன்
எங்கள் அணியில் 40 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.
சென்னை: தினகரன் ஆதரவு அணியில் 40 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்று தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
ஆளுநரை சந்தித்ததற்காக சபாநாயகர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்காக நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம் என்றும் தினகரன் அணி எம்எல்ஏக்கள் தங்க தமிழ் செல்வன், வெற்றி வேல் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்த 19 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய தலைமைகொறடா பரிந்துரை செய்திருந்தார். கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு விளக்கம் தருவதற்காக இன்று தலைமை செயலகத்திற்கு தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரும் சட்டசபை செயலரிடம் மனு அளித்தனர்.
தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் அனுப்பிய நோட்டீஸ்க்கு விளக்கம் அளித்ததாக கூறினார்.
தங்க தமிழ் செல்வன், தங்களின் அணியில் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், ஒவ்வொருவராக வெளியே வருவார்கள் என்றும் கூறினார்.
19 எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தது தவறேதும் இல்லை என்றும், இதற்கு விளக்கம் அளித்துள்ளோம் என்றும் தெரிவித்தார். ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று முதல்வர் அரசு மேடையில் அநாகரீகமான முறையில் பேசியுள்ளார் என்றும் தெரிவித்தார்.