தினகரன் லாயக்கில்லாதவர்... ’இரட்டை இலை’யை அதிமுகவுக்கு தந்த மாயத்தேவர் 'பொளேர்’ பேட்டி-exclusive
அதிமுகவை வழிநடத்த தினகரன் லாயக்கில்லாதவர் என்கிறார் மூத்த அரசியல் தலைவர் மாயத்தேவர்.
Recommended Video
திண்டுக்கல்: அதிமுகவின் துணை பொதுச்செயலர் என கூறி வரும் தினகரன் கட்சியை வழிநடத்த லாயக்கில்லாதவர் என அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை உருவாக்கித் தந்த திண்டுக்கல் மாயத்தேவர் கடுமையாக சாடியுள்ளார்.
1973-ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா இடைத் தேர்தலில் முதன் முதலாக அதிமுக போட்டியிட்டது. அப்போது அதிமுக வேட்பாளராக மாயத்தேவர் நிறுத்தப்பட்டார்.
மாயத்தேவர்தான் இரட்டை இலையை அதிமுகவின் சின்னமாக தேர்வு செய்தார். அத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுகவின் பொன். முத்துராமலிங்கம் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் வெற்றி சின்னமானது இரட்டை இலை.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட இரட்டை இலை சின்னம் முடங்கியது. தற்போது மதுசூதனன் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தந்த மாயத்தேவரை நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் சிறப்பு நேர்காணல் கண்டது. முதுமையாலும் உடல்நலக் குறைவாலும் மாயத்தேவர் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் தெளிவான பதில்களைத் தந்தார். அவரது மனைவி பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஒன் இந்தியா தமிழ் முன்வைத்த கேள்விகளும் மாயத்தேவர், அவரது மனைவி அளித்த பதில்களும்:
இரட்டை இலையும் எம்ஜிஆரும்
கேள்வி: 1973-ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா தேர்தலில் முதன் முதலில் அதிமுக போட்டியிட்டது. அப்போது எப்படி இரட்டை இலையை தேர்வு செய்தீர்கள்?
பதில்: அப்போதெல்லாம் மதுரையில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அங்குதான் சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு பயன்படக் கூடிய சின்னமாக இரட்டை இலை இருக்க வேண்டும் என்பதற்காக அதை தேர்ந்தெடுத்தார்.
அதை எம்ஜிஆரிடம் தெரிவித்த போது, திமுக உதயசூரியன் சின்னம் வைத்திருக்கும் போது இரட்டை இலை கருகிப் போய்விடுமே என விமர்சிப்பார்கள் என்றார். ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் இரட்டை விரலை காண்பித்து நிரந்தர வெற்றியை பெற்றார் தலைவரரே.. தாய்மார்களுக்கும் இரட்டை இலை சின்னம் பிடிக்கும் என சமாதானம் கூறப்பட்டது. இந்த விளக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டார்.
நடப்பது ஆட்சியே இல்லை
கேள்வி: 1973-ல் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற இரட்டை இலை காரணமா?எம்ஜிஆர் செல்வாக்கு காரணமா?
பதில்: எம்ஜிஆர் செல்வாக்குதான் காரணம்.. இரட்டை இலையை காண்பித்துவிட்டால் மட்டும் போதுமா? எம்ஜிஆர் செல்வாக்குதான்.
கேள்வி: தற்போது எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதே..அதை எப்படி பார்க்கிறீங்க?
பதில்: இங்க ஆட்சியா நடக்கிறது? நல்லாவே இல்லையே... இப்படியா இருக்கிறது... ஒருத்தருக்கு ஒருத்தர் ஒற்றுமை இல்லாம...கட்சியோட பெருமையையே கெடுத்துட்டாங்களே.
ஊழலாட்சி நடத்திய ஜெ
கேள்வி: தற்போதைய அதிமுகவின் செயல்பாடுகளைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: ஒருத்தருக்கு ஒருத்தர் தற்பெருமைதான் பேசுகிறார்கள். மக்களுக்காக பாடுபட்ட எம்ஜிஆர் எங்கே.. இவர்கள் எங்கே?
கேள்வி: எம்ஜிஆர்-ஜெயலலிதா ஆட்சி; தற்போதைய ஆட்சி பற்றி உங்கள் கருத்து
பதில்: எம்ஜிஆர் ஏழைகளுக்காகவே வாழ்ந்து மறைந்தார்; இருந்த கொஞ்சம் சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வைத்தார். அதற்குப் பின்னால் யாருமே அப்படி செய்யவில்லை.
ஜெயலலிதா தம்முடைய ஆட்சியில் ஊழல் பெருச்சாளிகளைத்தான் வளர்த்துவிட்டார். அந்தம்மா ஆட்சி முழுவதும் ஊழல்.
திமிரான ஜெயலலிதா
கேள்வி: எம்ஜிஆர்- ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட பாதிப்பு?
பதில்: எம்ஜிஆரின் மறைவுதான் எங்களை மிகவும் பாதித்தது.. மிகவும் பாசமாக இருப்பார். எளிமையாக இருப்பார். ஜெ.வைப் போல திமிராக இருக்க மாட்டார்.
சசிகலா வரலாம்
கேள்வி: தற்போது உட்கட்சி பூசல் இருக்கும் அதிமுகவை எப்படி பார்க்கிறீங்க?
பதில்: நெஞ்சு வலிக்குதுங்க.. யாரு உருவாக்குன கட்சி... இப்படி அசிங்கப்படுதே.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..ஒற்றுமையே இல்லையே..
கேள்வி: அதிமுகவில் சசிகலா பதவிக்கு வருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: எப்படிங்க ஏற்றுக் கொள்ள முடியும்? (மாயத்தேவர் குறுக்கிட்டு வந்துட்டு போகட்டும் என்கிறார்)
காமெடி பீசு தீபா
கேள்வி: அதிமுகவின் துணைப் பொதுச்செயலர் தினகரனைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தினகரனா, லாயக்கில்லை
கேள்வி: ஜெ. இல்லாத அதிமுகவில் யார் பதவிக்கு வந்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பயனிருக்கும் என நினைக்கிறீங்க?
பதில்: இப்ப இருக்கிற யாருமே இல்லை... நல்லவங்க வரனும்.. யாருங்க நல்லவங்க இருக்காங்க? நல்லவங்க எல்லாம் செத்துப் போயிட்டாங்க
கேள்வி: ஜெ. அண்ணன் மகள் தீபா பற்றி என்ன நினைக்கிறீங்க?
பதில்: அது ஒரு காமெடி பீசு... (மாயத்தேவர் குறுக்கிட்டு அதைப் பற்றியெல்லாம் நினைகிறதுக்கு பெரிய ஆள் இல்லை).
இவ்வாறு மாயத்தேவரும் அவரது மனைவியும் பதிலளித்தனர்.