அதிமுக கட்சியை அழிக்க தினகரன் செய்யும் வேலையை பார்த்தீர்களா.. குமுறிய ஓபிஎஸ்
அதிமுகவுக்குள் பல வேற்றுமையை ஏற்படுத்தி கட்சியை தினகரன் அழிக்கப்பார்ப்பதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்
Recommended Video
சென்னை: அதிமுக கட்சிக்குள் சிண்டுமுடிந்து கபளீகரம் செய்து தினகரன் அழிக்கப்பார்ப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தினகரன் பற்றி எனக்கு நன்றாக தெரியும், பல ஆண்டுகளாக அவரின் குணம் எப்படி, செயல்பாடுகள் எப்படி அனைத்தும் எனக்கு தெரியும். அவர் நல்லவர் இல்லை. அதனால் தான் அவர் அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
மன்னார்குடி குடும்பத்தின் இரும்பு பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்லகூடாது என்பதற்காக இணைந்து செயலாற்றி கொண்டிருக்கிறோம். 234 தொகுதிகளிலும் மக்களும் அதிமுகவின் பக்கம் தான் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டங்களே அதனை எடுத்து கூறுவதாக அவர் தெரிவித்தார்.
எதையோ எதிர்பார்த்து சிலர் தினகரன் பக்கம் சென்றிருக்கின்றனர். அவர்களை நம்ப கட்சியினர் தயாராக இல்லை என்றும், வரம்பு மீறிய அதிகாரத்தால் கடந்த காலத்தில் அதிகாராத்தின் எல்லைக்கே சென்றவர்கள் மன்னார்குடி குடும்பத்தினர் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
மேலும் அதிமுகவுக்குள் சண்டுமுடித்து கபளீகரம் செய்து கட்சியை அழிக்க தினகரன் நினைப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், அதிமுக தூய தொண்டர்கள் இருக்கும் வரை அது நடக்காது என்றும் கூறினார்.