இன்னும் 3 நாட்களில் தினகரன் கதை முடிந்துவிடும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு பேச்சு
தினகரனின் கதை 3 நாள்களில் முடிந்து விடும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சவால் விடுத்துள்ளார்.
நாகை: தினகரனின் கதை 3 நாள்களில் முடிந்து விடும் என்று நாகையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
அதிமுகவில் எடப்பாடி அணியினரும் , டிடிவி தினகரன் அணியினரும் அன்றாடம் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதன்படி இன்னும் ஒரு வாரத்தில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாகையிலும் திண்டுக்கல்லிலும் நேற்று நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஓ.எஸ்.மணியன் கூறுகையில், எடப்பாடிக்கு ஆட்சிக்கு ஒருவாரம் காலக்கெடு விதிக்கும் தினகரனின் கதை இன்னும் 3 நாள்களில் முடிந்துவிடும். அது எப்படி என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது என்றார். அமைச்சரின் இத்தகைய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனிடையே திண்டுக்கல்லில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன் கூறுகையில், ஜெயலலிதாவை யாரும் பார்க்கவிடாமல் சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டனர். ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தபோது, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் அவர்களும் ஜெயலலிதாவை அருகே சென்று பார்க்க முடியவில்லை.
யாராவது ஜெயலலிதாவை பார்த்திருந்தால் அவர் சசிகலா குடும்பத்தினர் குறித்த உண்மையை தெரிவித்துவிடுவார் என்ற பயத்தின் காரணமாக ஜெயலலிதாவை யாரும் நெருங்காதபடி இவர்கள் பார்த்துக் கொண்டனர் என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.