எம்.ஆர். விஜயபாஸ்கர் நீக்கம்.. தினகரன் கொடும்பாவியை எரித்து போராட்டம்.. கரூரில் பரபரப்பு.. வீடியோ
கரூர் அதிமுக மாவட்ட செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கரை தினகரன் நீக்கியதைத் தொடர்ந்து அவரது உருவபொம்மையை எரித்து, எதிர்ப்பு கோஷ்டியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்: கரூர் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதைக் கண்டித்து தினகரன் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு கோஷ்டியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததையடுத்து தினகரன் தரப்பு கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுத்த வாபஸ் பெற்றதாக அறிவித்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
அதனையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டவர்களை நீக்கி வருகிறார் தினகரன். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். அப்பதவியிலிருந்து அவரை நீக்கியதாகத் தினகரன் நேற்று அறிவித்தார். மேலும், கரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமிப்பதாக அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர்கள் தினகரனின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.