தொடரும் இழுத்தடிப்பு: டிடிவி தினகரன் மீதான ஃபெரா வழக்குகள் விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் மீதான ஃபெரா வழக்குகள் விசாரணை ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசிகலா, டி.டி,வி தினகரன், பாஸ்கரன் ஆகியோர் 1996-1997-ல் அமெரிக்காவில் ரின் சார்ட் லிமிடெட் நிறுவனத்திடமும், சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடமும் எந்த ஒரு ஆவணங்களுமே இல்லாம பணம் பரிவர்த்தனை செய்துள்ளனர். இதனால் மூன்று பேர் மீதும் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டி.டி.வி தினகரன் மீது டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கு இங்கிலாந்தின் வர்ஜின் தீவில் உள்ள பர்க்லே வங்கி மூலம் 1.04 கோடி அமெரிக்க டாலரை மாற்றியது; மற்றும் அயர்லாந்தின் வெஸ்ட்பேங்க் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 44.37 பவுண்ட்டுகளை மாற்றியது ஆகிய வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஆஜராக விலக்கு கோரி மனு
இவ்வழக்கு விசாரணைக்கு தினகரன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தாம் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் தேர்தல் முடியும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
20 ஆண்டுகாலம் இழுத்தடிப்பு
20 ஆண்டுக்கு மேலாக இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகையால் டி.டி.வி. தினகரன் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது. டிடிவி தினகரன் வழக்கை இழுத்தடிக்கவே தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகிறார். தேர்தலுக்கும் வழக்கு விசாரணைக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை எனவும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
தினகரன் மனு தள்ளுபடி
பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கை விரைவாக நடத்த வேண்டும். ஆகையால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து எந்த ஒரு விலக்கும் தர முடியாது என்று கூறி டி.டி.வி. தினகரன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். இன்று முதல் தினந்தோறும் தினகரன் வழக்கில் விசாரணை நடைபெறும் எனவும் மாஜிஸ்திரேட் மலர்மதி கூறியிருந்தார்.
மீண்டும் ஒத்திவைப்பு
இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். ஆகையால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதை ஏற்று டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணையை ஏப்ரல் 4-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்.