தினகரனின் பலத்தை நிரூபிக்கும் மேலூர் பொதுக் கூட்டம்... தடாலடி அறிவிப்புகள் வெளியாகும்?
தினகரனின் பலத்தை நிரூபிக்கும் வகையில் மேலூரில் இன்று பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் ஏதேனும் அறிவிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலூர்: எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி மேலூரில் தினகரன் தலைமையில் இன்று பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் தினகரனுக்கு கட்சியில் உள்ள பலம் தெரிய வரும்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என அணிகள் பிரிந்து இருக்கும் நிலையில் டிடிவி தினகரன் தனது பலத்தை நிரூபிக்க இன்று மதுரை மேலூரில் பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தினகரன் பல தடாலடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு தமிழக அரசு அனுமதிக் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த கூட்டத்தை தினகரன் இன்று நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது என திவாகரன் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திவாகரன் செய்து வருகிறார்.
இக்கூட்டத்தில் எத்தனை எம்.எல்.ஏக்கள் பங்கேற்பர்? இதனால் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து வருமா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.