தினகரனுக்கு எதிராக ஏன் வரிந்துகட்டுகிறார் கிருஷ்ணப்ரியா? - சசிகலா கொடுத்த 'திடீர்' ட்விஸ்ட்
சென்னை: டி.டி.வி.தினகரனை மையமாக வைத்து சடுகுடு ஆடிக் கொண்டிருக்கின்றனர் விவேக்கும் கிருஷ்ணப்ரியாவும். ' ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரைக் கைப்பற்றுவதுதான் தினகரனின் நோக்கம்.
நமது எம்.ஜி.ஆருக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கிருஷ்ணப்ரியா. இதன் விளைவுதான் பல ரூபங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது' என்கின்றனர் சசிகலா சொந்தங்கள்.
ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை வீடியோவை வைத்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஆட்டத்தை நடத்தி முடிக்க நினைத்தார் தினகரன். ஆனால், அதே வீடியோவை வைத்து இளவரசி குடும்பத்தார் நடத்தும் சதிராட்டங்களை தினகரனால் முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.
பெங்களூர் சிறையில் முகாம்
'துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தினகரனை நீக்குங்கள்' என்ற கோஷத்தோடு பெங்களூரு சிறையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக சசிகலாவை சந்திக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் தினகரன். கர்நாடக புகழேந்தியை சிறைக்குத் தூது அனுப்பியும் சசிகலா கோபம் தணியவில்லை. ' கொஞ்சநாள் சித்தி பேசாம இருப்பாங்க. அப்புறம் சரியாயிடுவாங்க' என நட்பு வட்டத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார் தினகரன்.
'டார்கெட்' ஜெயா டி.வி!
தினகரன் Vs கிருஷ்ணப்ரியா மோதல் குறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி கோஷ்டியின் முக்கிய பிரமுகர் ஒருவர், " தொடக்கத்தில் இருந்தே ஜெயா டி.வி நிர்வாகத்தையும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொள்ள நினைத்தார் தினகரன். கட்சிப் பதவியோடு தொலைக்காட்சியும் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வளைத்துவிடலாம் என்பதுதான் அவருடைய திட்டம்.
விவேக் பொறுப்பு
இதற்கு சசிகலா சம்மதம் தெரிவிக்கவில்லை. 'கணக்கு வழக்குகளோடு டி.வி, பத்திரிகையை விவேக் கவனிக்கட்டும்' எனச் சொல்லிவிட்டார். இதனை எதிர்பார்க்காத தினகரன் கட்சி வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார்.
பரோலில் வந்த சசிகலா
இந்நிலையில், நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமானது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. சசிகலாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட சந்தானலட்சுமி, மகாதேவன் ஆகியோர் மரணத்துக்குக்கூட பரோல் கேட்காத சசிகலா, நடராஜனைப் பார்க்க பரோல் கேட்டார். தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கிக் கொண்டே, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜனை சந்தித்தார்.
சசிகலாவிடம் குமுறல்
இந்தநேரத்தில் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் வெளியான சில கட்டுரைகளால் அரசியல்ரீதியாக சில அழுத்தங்களுக்கு ஆளானார் தினகரன். இதைப் பற்றி பரோலில் வந்த சசிகலாவிடம் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். 'இப்படியெல்லாம் செய்கிறார்கள். எந்தநேரத்தில் எதை எழுத வேண்டும் என்றுகூடத் தெரியவில்லை. இதைக் கட்டாயம் சரி செய்ய வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.
தினகரனுக்கே ட்விஸ்ட்!
இதை எதிர்பார்த்த சசிகலா, ' அப்படியானால் நமது எம்.ஜி.ஆர் நிர்வாகத்தை கிருஷ்ணப்ரியா பார்த்துக் கொள்ளட்டும்' எனக் கூறிவிட்டார். இப்படியொரு அதிரடியை தினகரன் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகை நிர்வாகத்தை தன்னிடம் ஒப்படைப்பார் சித்தி என்றுதான் நினைத்தார். இப்படியொரு ட்விஸ்ட்டை அவர் எதிர்பார்க்கவில்லை. தற்போது தினமும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்கு வந்து பத்திரிகைப் பணிகளை கவனித்துக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணப்ரியா.
குடும்ப பிரச்சினை
தொலைக்காட்சி, பத்திரிகை என இரண்டிலும் இளவரசி குடும்பத்தின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது. இவர்களை வளரவிட்டால் நமக்குத்தான் ஆபத்து என்பதை தினகரன், திவாகரன் தரப்பினர் உணர்ந்து வைத்துள்ளனர். எனவேதான், இவர்களை வீழ்த்துவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்த வீடியோவால் ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறார் கிருஷ்ணப்ரியா.
பலியாடு வெற்றிவேல்!
'வீடியோவை நான் வெளியிடச் சொல்லவில்லை' என தினகரன் மறுத்தாலும் அதை நம்புவதற்கு இளவரசி குடும்பத்தில் யாரும் தயாராக இல்லை. ஒருவேளை சசிகலாவிடம் இருந்து கூடுதல் நெருக்கடிகள் வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றியும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் தினகரன். ' நான் வழக்கு விஷயங்களுக்காக அலைந்து கொண்டிருந்ததால், வெற்றிவேலிடம் அதைக் கொடுத்திருந்தேன். அவர் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்டுவிட்டார். எனவே அவரைக் கட்சியில் இருந்து நீக்கிவிடலாம்' என சசிகலாவிடம் சொல்வதற்கும் அவர் தயாராகி வருகிறார். குடும்ப சுயநலத்தில் வெற்றிவேல் பலியாவாரா? தினகரன் கட்டம் கட்டப்படுவாரா என்பதெல்லாம் சசிகலாவிடம் விவேக் பேசுவதைப் பொறுத்தது" என்றார் இயல்பாக.