இன்னும் 15 நாள்தான் தினகரனுக்கு டைம்.. என்ன பண்ணப் போகிறார்?
சென்னை: 60 நாள்தான் டைம் என்று அதிமுகவின் இணைப்புக்கு தினகரன் கெடு விதித்து 45 நாட்கள் ஓடி விட்டது. இன்னும் 15 நாள்தான் மிச்சம் உள்ளது. அதன் பிறகு தினகரன் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறைக்குப் போய் திரும்பி வந்த பின்னர் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார் தினகரன். எடப்பாடி பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களும் வரிசையாக தினகரனை சந்தித்துப் பேசிக் கொண்டுள்ளனர்.
தற்போது 60 நாள் அவகாசம் கிட்ட வந்து விட்ட நிலையிலும் கூட பெரிய பரபரப்பையோ அல்லது அது ஏற்படுவதற்கான அறிகுறியையோ காணவில்லை. இதனால் தினகரன் தரப்பு என்ன பண்ணப் போகிறது என்பது குழப்பமாகவே உள்ளது.
எடப்பாடி அரசுக்கு
எம்.எல்.ஏக்களை சந்திப்பது, அடுத்தகட்ட திட்டம் குறித்து விவாதிப்பது என அடையாறு பங்களாவை பரபரப்பாக வைத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது உளவுத்துறை.
தினசரி வீட்டில் கூட்டம்
தினம்தோறும் அவரைச் சந்திக்கும் எம்.எல்.ஏக்கள், அவர்களது நோக்கம் உள்பட அனைத்து விவரங்களையும் முதல்வர் கவனத்துக்கு அனுப்பி வருகிறார் உளவுத்துறையின் முக்கிய அதிகாரி.
என்ன நடக்கும்
60 நாள் கெடு முடிந்தும் தினகரன் என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க முடிவெடுப்பாரா அல்லது ஆட்சியைக் கைப்பற்ற முனைவாரா என்பது தெரியவில்லை.
டெல்லி ஆதரவு இல்லை
இந்நிலையில், பிரதமருக்கு நெருக்கமான சோர்ஸுகள் மூலம் டெல்லியின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார் தினகரன். அவரது முயற்சிக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். இதனால் தினகரன் தரப்பு நிதானமாக காய் நகர்த்தி வருகிறதாம்.