தை பிறந்தால் வழி பிறக்கும்... ஆட்சி கலையும்- டிடிவி தினகரன் ஸ்கெட்ச்
தை பிறந்தால் வழி பிறக்கும்... ஆட்சி கலையும் என்று மீண்டும் நினைவு படுத்தியுள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் ஆட்சி கலையும் என்று திருக்குறுங்குடி ஆலயத்தில் வைத்து சொல்வது கடவுள் பெருமாள் சொல்வது போன்றது என்று கடந்த அக்டோபர் மாதம் சொன்ன தினகரன் அதை நினைவூட்டும் வகையில் அடுத்த கட்ட செயல்களை செய்து வருகிறார்.
பொங்கல் வாழ்த்து கூறும் போதே கிலி ஏற்படுத்துகின்றனர் அரசியல் கட்சியினர். தை பிறந்தால் தமிழகத்தை பிடித்துள்ள சனி ஒழியும் என்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
அதே போல வாழ்த்து கூறியுள்ள டிடிவி தினகரனோ, பதரைப் போல ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துள்ளவர்களை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.
தை பிறக்கட்டும்
கடந்த அக்டோபர் மாதம் நெல்லை மாவட்டம் வந்த டிடிவி தினகரன், எடப்பாடி அணியினர் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் கூடிய விரைவில் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லும் காலம் வரும். அந்த நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையும் என்றார்.
தினகரன் வாக்கு
தை பிறந்தால் வழி பிறக்கும். திருக்குறுங்குடி ஆலயத்தில் வைத்து சொல்வது கடவுள் பெருமாள் சொல்வது போன்றது என்று கூறியதோடு அதற்கேற்ப காய் நகர்த்தினார் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அடுத்த கட்ட நகர்வு
சட்டசபையில் எம்எல்ஏவாக தனது செயல்பாடுகளை காட்டிய தினகரன், நேற்று சசிகலாவை சந்தித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வந்திருக்கிறார். கட்சி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை தினகரனே தீர்மானிக்கலாம் என்று தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளாராம் சசிகலா.
தகுதி நீக்க வழக்கு
திட்டமிட்டபடி தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க. தான் எங்கள் கட்சி. 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கிறேன். இந்த தீர்ப்பு வந்த பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
ஆட்சி மாற்றம்
18 எம்.எல்.ஏக்கள் என்னுடன் இருக்கும் நிலையில் மேலும் 5 பேர் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியுள்ளனர். இது தவிர ஸ்லீப்பர் செல்களும் இருக்கின்றனர். இரண்டொரு மாதத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். அதே வேகத்தோடு பொங்கல் வாழ்த்திலும் சூசகமாக ஆட்சி கலைப்பு பற்றி கூறியுள்ளார். தை பிறந்தால் தமிழ்நாட்டில் யார் யாருக்கு வழி பிறக்கப் போகுதோ பார்க்கலாம்.