சொத்து குவிப்பு வழக்கு: தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, கணவர் பாஸ்கரன் சரண்- சிறையிலடைக்க உத்தரவு!
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற இருவரையில் சிறையிலடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினகரன் சகோதரி ஸ்ரீதளாதேவியின் கணவர் 'ரிசர்வ் வங்கி' பாஸ்கர். ரிசர்வ் வங்கியில் ஊழியராக பணியாற்றியவர். இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1.68 கோடி சொத்து குவித்தார் என்பது சிபிஐ வழக்கு. இது தொடர்பாக 1997-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 2008-ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மனைவி ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கும் மொத்தம் ரூ40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரது சிறை தண்டனையையும் உறுதி செய்தது.
இதையடுத்து கடந்த மாதம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது சிபிஐ நீதிமன்றம். இந்நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் இருவரும் இன்று சரணடைந்தனர். இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் வகையில் இருவரையும் சிறையிலடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.