அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி சதி: தினகரன் குற்றச்சாட்டு
அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி சதி செய்வதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி சதி செய்வதாக ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தாம் மீண்டும் அதிமுகவில் இணைய பிரதமர் மோடிதான் காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதேபோல் சசிகலா குடும்பத்தின் டார்ச்சர் குறித்தும் ஓபிஎஸ் விவரித்திருந்தார்.
பாஜகவின் ஏஜெண்டுகளாக
இது தொடர்பாக இன்று சென்னையில் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவின் முதல் ஏஜெண்ட் ஓபிஎஸ்; 2-வது ஏஜெண்ட் எடப்பாடி பழனிச்சாமி. இதனால்தான் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
ஓபிஎஸ் வளர்ச்சியில் சசிகலா
இரட்டை இலை சின்னம் கொடுத்தும் ஆர்.கே.நகரில் ஜெயிக்க முடியவில்லை என்பதால்தான் இம்பொடெண்ட் என குருமூர்த்தி விமர்சித்தார். ஓபிஎஸ்-ன் படிப்படியான உயர்வுக்கு சசிகலாதான் காரணம்.
சசி முதல்வராக முடியும்
ஜெயலலிதா இறந்த உடனேயே சசிகலாவோ அல்லது நானோ முதல்வராகி இருக்க முடியும். ஆனால் ஓபிஎஸ்ஸை முதல்வராக்கினார் சசிகலா.
ஓபிஎஸ் ராஜினாமா ஏன்?
அப்போது பழைய பன்னீர்செல்வமாக இல்லை என எடப்பாடி போன்றவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால்தான் அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நேரிட்டது.
தியானத்தின் பின்னணியில் டெல்லி
ஓபிஎஸ்தான் சசிகலாவை முதல்வராக முன்மொழிந்தார். அதன்பின்னர் பிப்ரவரி 7-ந் தேதி டெல்லி தூண்டிவிட்டுதான் தியானம் இருக்க போனார் ஓபிஎஸ்.
அதிமுகவை அழிக்க சதி
லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கவில்லை என்ற கோபம் இருந்தது. அதனால் ஜெயலலிதா இறந்த உடன் அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.
உண்மையை வெளிப்படுத்திய ஓபிஎஸ்
இதனைத்தான் இப்போது ஏதோ ஒரு கோபத்தில் ஓபிஎஸ்ஸும் வெளிப்படுத்தியிருக்கிறார். எதற்காக ஓபிஎஸ் இப்போது உண்மையை கூறுகிறார் என தெரியவில்லை.
இவ்வாறு தினகரன் கூறினார்.