பதவியும் போயிடுச்சே.. கோயில் கோயிலாக அலையும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள்!
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் கோயில் கோயிலாக தரிசனம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடகு: தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் கோயில் கோயிலாக தரிசனம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை அண்மையில் சபாநாயகல் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க அவர்கள் காத்திருக்கின்றனர். சசிகலாவை சந்தித்த பிறகே அவர்கள் ஊர் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.
கோயிலில் வழிபாடு
இந்நிலையில் குடகு ரிசாட்டில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. பழனிசாமியை பதவி நீக்கம் செய்யும்வரை குடகிலேயே தங்கியிருப்போம் என்று கூறியுள்ளனர்.
மன உளைச்சல் காரணமாக
மேலும், பதவி இழந்ததாலும், வீட்டை விட்டு பிரிந்து இருப்பதாலும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை போக்க, தலைக்காவிரி மற்றும் சுற்றுலா தலங்களுக்கும், கோயில்களுக்கும் சென்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று 18 பேரில் சில எம்.எல்.ஏக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வந்த முன்னாள் எம்எல்ஏக்கள்
மதியம் பொழுதை அங்கேயே கழித்த அவர்கள், மாலையில் வாகனம் மூலம் குடகு திரும்பினர். இதற்கிடையில் ரிசாட்டில் இருந்த எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் கதிர்காமு ஆகியோர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
மீண்டும் குடகு திரும்புகின்றனர்
குடும்ப விவகாரம் மற்றும் சொந்த வேலைகள் தொடர்பாக அவர்கள் சென்னை புறப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலை மீண்டும் விமாம் மூலம் அவர்கள் குடகு திரும்புவார்கள் என்று தெரிகிறது.