எடப்பாடியைவிட ஓபிஎஸ் அணி மீதுதான் எங்களுக்கு முதல் அதிருப்தி.. தினகரன் தரப்பு பரபரப்பு வாதம்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணி மீதுதான் எங்களின் முதல் அதிருப்தி என்று தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு வாதம் முன் வைத்துள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அவர்கள் தரப்பு தாக்கல் செய்த வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த விஷயத்தில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கினார். சக நீதிபதி சுந்தர், சபாநாயகரின் முடிவு உள்நோக்கம் கொண்டது என்று தனது தீர்ப்பில் ஆணித்தரமாக தெரிவித்தார். எனவே சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.
விசாரணை துவக்கம்
மாறுபட்ட தீர்ப்பு வெளியானதையடுத்து, 3வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. இன்று முதல் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் தரப்புக்கே முதல் கேள்வி
இன்று, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் வழக்கறிஞர் ராமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஓபிஎஸ் அணியினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசுக்கு எதிராக எதையும் செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி மீது நடவடிக்கை எடுக்கவில்லையே என்பதுதான் எங்கள் கேள்வி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
சொல்லவேயில்லை
அரசுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம் என்று எந்த இடத்திலும் கூறவேயில்லை. ஆட்சிக்கு எதிராக நாங்கள் செயல்படுகிறோம் என்று முதல்வர் கூறவில்லை. சபாநாயகர்தான் கூறியுள்ளார். திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க முயற்சி செய்தோம் என கூறுவதும் சபாநாயகர்தான். நாங்கள் ஆளுநரை சந்தித்த அதே நாளில் திமுக சார்பிலும் ஆளுநரை சந்தித்துள்ளனர். இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.
நாளை தொடரும்
எந்த ஒரு எம்எல்ஏவும் மக்களுக்காக பணியாற்றதான் விரும்புவார்கள். பதவியை இழக்க விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தினகரன் தரப்பு தகுதி நீக்கத்திற்குள்ளான எம்எல்ஏக்கள் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை வாதம் நடைபெற்ற நிலையில், நாளைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.