திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்!
திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
Recommended Video
திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராகிவிட்டார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பெரும் பிரபலமாகிவிட்டார்.
அமைச்சர்களுக்கு ஈடாக பிரபலம்
அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பது, அதிமுக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக பேசுவது என புகழேந்தி அமைச்சர்களுக்கு ஈடாக பிரபலமாகிவிட்டார்.
விபத்தில் சிக்கிய புகழேந்தி
இந்நிலையில் நண்பர் ஒருவரின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக புகழேந்தி பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
புகழேந்தி படுகாயம்
பின்னர் மேம்பால தடுப்புசுவற்றின் மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி படுகாயமடைந்தார்.
கைகளில் பலத்த காயம்
புகழேந்தியின் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினகரன் அணியில் நீடிப்பு
சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு புகழேந்தி அணி மாறுவார் தகவல் பரவியது. ஆனால் அதனை மறுத்த புகழேந்தி தொடர்ந்து தினகரன் அணியிலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.