எந்த நேரத்திலும் கைது.. உஷாரான வெற்றிவேல்.. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வெற்றிவேல் மனு, இன்று மதியம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது அனைத்து தரப்பினரிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவின் வீடியோவை அரசியல் ஆதாயத்திற்காக வெற்றிவேல் வெளியிட்டு விட்டதாக அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின.
இது ஒருபுறமிருக்க சட்டத்திற்கு புறம்பாக தேர்தல் நேரத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன்னிச்சையாக வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதாக நேற்று தினகரனும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து வெற்றிவேலை கைது செய்ய காவல்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனை தெரிந்துக்கொண்ட வெற்றிவேல் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மதியம் 1 மணியளவில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.