ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளிக்கும் தினகரன்.. இதுவும் 20 ரூபாய் டோக்கன் மாதிரியா?!
ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி கொடுப்பதாக தினகரன் கூறி வருவது 20 ரூபாய் டோக்கன் போல் ஆகிவிடுமோ என அவரது ஆதரவாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி கொடுப்பதாக தினகரன் கூறி வருவது 20 ரூபாய் டோக்கன் போல் ஆகிவிடுமோ என அவரது ஆதரவாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரன் விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கவிழும் என ஆருடம் கூறி வருகிறார். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்றும் பின்னர் ஆட்சியும் கட்சியும் தங்களுடையது தான் என பிரஸ் மீட்டுக்கு பிரஸ்மீட் வசனம் பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி மாமியார் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் கருத்து கூறி வருகிறார் தினகரன்.
எகோ செய்யும் விசுவாசிகள்
அவரது ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜியும் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற ரீதியில் தினகரன் கூறுவதை அப்படியே எகோ செய்கின்றனர்.
தீர்ப்புக்குப் பின் ஆட்சி
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பில் தனது அணிக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என நம்பியுள்ள தினகரன், தீர்ப்புக்குப் பின் ஆட்சி தங்களுடையதுதான் என தொண்டர்களிடம் கூறி வருகின்றார்.
போட்டி போடும் விசுவாசிகள்
அதோடு நிற்காமல் ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள உங்களில் ஒருவர்தான் முதல்வர் என்றும் அவர்களின் ஆசையை தூண்டிவிட்டு வருகின்றார். இதனால் தினகரனுக்கு ஆதரவாக தங்களின் விசுவாசத்தைக் காட்ட போட்டிப் போட்டுக்கொண்டு அரசை வசைபாடி வருகின்றனர் தினகரனின் விசுவாசிகள்.
ரூ.20 டோக்கன் போல்?
அதேநேரத்தில் நிச்சயம் தினகரன் முதல்வர் பதவியை நமக்கு கொடுப்பாரா அல்லது ஆர்கே நகர் தொகுதியில் கொடுத்த 20 ரூபாய் டோக்கன் போல நிலைமை ஆகிவிடுமோ என்றும் அச்சமடைந்துள்ளனராம் விசுவாசிகள்.
தலைக்கு 10,000
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி 89,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், வாக்காளர்களுக்கு தலைக்கு 10000 ரூபாய் கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
காத்திருக்கும் மக்கள்
இதற்காக 20 ரூபாயை டோக்கனாகவும் கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை பணம் வரவில்லை. அந்த 20 ரூபாயை கூட செலவு செய்யலாமா அல்லது என்றாவது பணம் வருமா என்ற எதிர்பார்ப்பில் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஆர்கே நகர் வாக்காளர்கள் காத்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.