தனிக்கட்சியா? பேரவையா? அதிமுகவா? எங்கே செல்லும் இந்தப் பாதை... தினகரன் 'திருதிரு
தினகரன் தனிக்கட்சி தொடங்க அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகிவிட்ட தினகரன் அடுத்த கட்ட அரசியல் நகர்வை எப்படி மேற்கொள்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினகரன் தலைமையை ஏற்று முதல்வர் எடப்பாடி அரசுக்கு அளித்த ஆதரவை 18 எம்.எல்.ஏக்கள் விலக்கிக் கொண்டனர். இதனால் 18 பேரின் பதவியும் பறிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு தினகரன் எம்.எல்.ஏ.வாகி சட்டசபைக்குள் நுழைந்துவிட்டார்.
தனிக்கட்சியில் தீவிரம்
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற மிதப்பில் தினகரன் தனிக்கட்சியை தொடங்கியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் அவரை நம்பி உள்ளதும் போச்சுடா என கையறு நிலையில் இருப்பவர்களோ, அதிமுகவை கைப்பற்றுவதற்குதான் இவ்வளவும் செய்திருக்கிறோம்.. நீங்க தனிக்கட்சி தொடங்குனா எப்படி? என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கவலையே இல்லாத தினகரன்
தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டால் தகுதி நீக்க வழக்கு முடிவுக்கு வந்துவிடும்... என்னதான் தலைகீழாக நின்றாலும் அதிமுகவுக்கு உரிமையே கோர முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர் பதவியை பறிகொடுத்தவர்கள். ஆனால் தினகரனோ அதிமுக, இரட்டை இலை பற்றியெல்லாம் எந்த கவலையுமே படவில்லையாம்.
ஆட்சி கைப்பற்ற முடியும்
தாம் ஒரு எம்ஜிஆர்; தமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது; பாஜகவை எதிர்க்க என்னால் மட்டுமே முடியும் என்கிற மிதப்பில் இருக்கிறாராம். அதனால் தனியே கட்சி தொடங்கி அதிமுக தொண்டர்களை தம் பக்கம் சேர்த்து ஆட்சியை பிடித்துவிடலாம் என மோட்டு வலையை பார்த்துக் கொண்டு கனவு காண்கிறார் என விரக்தியில் புலம்புகின்றனர் பதவியை பறிகொடுத்துவிட்டு நிற்கும் மாஜி எம்.எல்.ஏக்கள்.
தடுத்த நிர்வாகிகள்
தமது பெயரிலான 'தீந்தமிழன்' தினகரன் பேரவையை விரிவுபடுத்தி தனிக்கட்சியாக்குவது என்பதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இன்று கூட தனிக்கட்சியை அறிவித்துவிடலாம் என்கிற முடிவில்தான் இருந்த தினகரனை கூட இருந்த நிர்வாகிகள்தான் கடுமையாக போராடி தடுத்து வைத்திருக்கிறார்களாம். மேலும் தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் அதை ஜாதிய கட்சியாக முத்திரை குத்தி முடக்குவது என்பது வியூகத்துடன் எதிர்தரப்பும் ரெடியாக இருக்கிறதாம்.
குழப்பத்தில் தினகரன்
தினகரனைப் பொறுத்தவரை தற்போது தனிக்கட்சி தொடங்குவதா? தீந்தமிழன் தினகரன் பேரவையை முன்னெடுப்பதா? அதிமுகவை கைப்பற்றுவதா? என எந்த வியூகமும் இல்லாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
எங்கே செல்லும் இந்த பாதை?