பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்- கமல் உருவபொம்மையை எரித்து தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம்
தினகரனை விமர்சிப்பதை கமல் நிறுத்தவில்லை என்றால் தக்க பின்விளைவுகளை அவர் சந்திப்பார் என அவரின் கொடும்பாவியை எரித்த தினகரனின் ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை தரைக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் தினகரனை குறித்து கமலஹாசன் ஒரு வார இதழில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் ஆர்கேநகரில் ஊரறிய வெற்றி விலைக்கு வாங்கப்பட்டதாகவும், அதற்கு மக்கள் உடந்தையாக இருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த தினகரன், ஆர்கேநகர் மக்களை கமல் கேவலப்படுத்துவதாக பதிலளித்திருந்தார். மேலும் கமல் வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் தினகரன் கேட்டுக்கொண்டிருந்தார். இருவருக்கும் இடையேயான மோதல் இலைமறைவு காயாக இருந்த நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் இன்று வெளிப்படையாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பேருந்து நிலையம் அருகே திரண்ட தினகரன் ஆதரவாளர்கள் கமலின் உருவ பொம்மையை எரிக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தினகரன் குறித்த தரக்குறைவான விமர்சனங்களை முன்வைப்பதை கமல் அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தகுந்த பின்விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியதிருக்கும் என கமலின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.