தினகரன் ஆதரவு 16 எம்.எல்.ஏ.க்களின் 'திடீர்' ரிசார்ட் விசிட்டால் பரபரப்பு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீரென ரிசார்ட்டில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: தினகரன் ஆதரவு 16 எம்.எல்.ஏக்கள் திடீரென நெல்லை ரிசார்ட் ஒன்றுக்கு சென்றதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
இதனையடுத்து 3-வது நீதிபதி விமலா இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தாம் வழக்கை வாபஸ் பெறப் போவதாக கூறி வருகிறார்.
இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் முதல்வர் எடப்பாடியை ஆதரிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால் தினகரன் இதனை திட்டவட்டமாக மறுத்தும் வருகிறார்.
இந்த நிலையில் நெல்லையில் ரிசார்ட் ஒன்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏக்கள் அணி தாவிவிடுவார்களோ என்பதற்காக ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக தினகரன் ஆதரவு வட்டாரங்களில் விசாரித்த போது, திருமணம் ஒன்றுக்காக தினகரனுடன் எம்.எல்.ஏக்கள் சென்றனர். அப்படியே ரிசார்ட் ஒன்றில் ஆலோசனை மட்டும் நடத்தி விட்டு அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர் என்கின்றனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் திடீர் ரிசார்ட் பயணம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.