ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு.. தொடரும் தினகரன் கோஷ்டி 34 எம்எல்ஏக்களின் புறக்கணிப்பு !
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 34 பேரும் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. தினந்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தினகரன் கோஷ்டியும், எடப்பாடி அணியும் செயல்பட்டு வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை பற்றி தெரியவந்ததும் இரு தரப்பினருக்கும் சசிகலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில் நேற்று தம்பித்துரை, டிடிவி தினகரன் மற்றும் அவர் குடும்பத்தினர் பெங்களூர் சென்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.
முதலில் தம்பித்துரை பேசினார். பிறகு டி.டி.வி. தினகரன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆட்சியிலும், குடும்பத்திலும் நடக்கும் சில நிகழ்வுகள் பற்றி அவர்கள் விரிவாக விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 34 பேரும் கலந்துகொள்ளவில்லை.
கூட்டத்திற்கு பின்னர் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பது என எம்எல்ஏக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இருப்பினும் தினகரன் கோஷ்டி எம்எல்ஏக்கள் 34 பேரும் பங்கேற்கவில்லை என்றாலும் இது ஒருமனதான முடிவு தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாமல் அறிவிக்கப்பட்டுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எடப்பாடி தலைமையில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியிலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் கட்சி நடத்தும் கூட்டங்களில் புறக்கணித்து வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.