மத்திய அரசுடன் இணக்கமா.. எடப்பாடியாரை கலாய்த்த தினகரன்
சென்னை: ஆளுநர் உரைக்கு பாராட்டு தெரிவிக்க அனுமதி மறுக்கப்படுவதாக கூறி வெளிநடப்பில் ஈடுபட்ட தினகரன், தமிழக அரசு பாஜகவின் உத்தரவுகளை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களை தொடர்ந்து இன்றும் வெளிநடப்பில் ஈடுபட்ட ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன், சட்டசபையில் தனக்கு பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக கூறினார்.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபையில் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்தும் அதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
ஜெயலலிதா ஆட்சி என்ற கூறிக்கொண்டு அனைத்தையும் எடப்பாடி அரசு மாற்றி வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் மோடி படத்தை மாட்டுவதில் தான் எடப்பாடி அரசு மும்முரமாக இருப்பதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், மேயரை மக்களே தேர்ந்தெடுக்கும் பழைய முறை மீண்டும் கொண்டு வரப்படுவதற்கு பாஜக காரணம் என்றார். பாஜகவின் உத்தரவுகளை தொடர்ந்து எடப்பாடி அரசு நிறைவேற்றி வருவதாக கூறிய அவர், மத்திய அரசுடன் இணக்கம் என்பது வேறு, மத்தியில் ஆளும் கட்சியுடன் இணக்கம் என்பது வேறு என கூறினார்.
பாஜகவிடம் தொடர்ந்து தமிழக அரசு கைகட்டி, வாய்போத்தி நிற்பதாக கூறிய அவர், இதேநிலை தொடர்ந்தால் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிடும் என்றார். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதில் கண்டிப்பாக தாங்கள் அதில் நிற்போம் என்றும் தினகரன் உறுதிப்பட தெரிவித்தார்.