பொறுமைக்கும் எல்லை உண்டு.. அதிமுக அம்மாவுக்கு வார்னிங் விட்ட தினகரன்
சென்னை: பொறுப்பற்ற முறையில் நான் நடந்து கொள்ள மாட்டேன். ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார் தினகரன். அதற்கு முன்னதாக கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அவர் வெளியிட்டார். தனது சுற்றுப்பயணத் திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
தினகரன் தனது பேட்டியின்போது கூறுகையில், பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களை நீக்கி நான் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள மாட்டேன். ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு.
ஜெயக்குமாரை மீனவர் பிரிவு செயலாளராக நியமித்தவரே சசிகலாதான். நடவடிக்கை எடுக்க ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் அதைச் செய்ய சசிகலாவும் விரும்பவில்லை, நானும் விரும்பவில்லை என்றார் தினகரன்.
முன்பு சசிகலாவும் கூட ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும். அதன் பிறகு செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று கூறியிருந்தார். பின்னர் அவர் சிறைக்குப் போய் விட்டார். இப்போது தினகரனும் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று பேசியுள்ளார்.