தேர்தல் செலவு வடிவத்தில் தினகரனுக்கு செக் -தவறு நிரூபிக்கப்பட்டால் தகுதி நீக்கம் - 3 ஆண்டு தடை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்துக்கு மேல் செலவு செய்தது நிரூபணமானார் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரான டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருப்பது உறுதியானால் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது.
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் செலவு விவரங்களை ஆய்வு செய்ய செலவின பார்வையாளர்கள் 23ம் தேதி சென்னை வருகிறார்கள்.
ஆர்.கே. நகரில் டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோக்கன் வழக்கு
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கத்தை கத்தையாக பறந்துள்ளது. ஹவாலா முறையில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 6000 ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அறிக்கை
இது தொடர்பான முழு அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமையன்று வழங்கியுள்ளார். வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது, 20 ரூபாய் டோக்கன் வழங்கியது தொடர்பான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
24 ஆம் தேதி கடைசி தேதி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் செலவின பார்வையாளராக இருந்த ஷிவ் ஆஷிஸ், குமார் பிரணவ் ஆகியோர் வருகிற 23ம் தேதி சென்னை வருகின்றனர். தேர்தல் சட்ட விதிமுறைப்படி ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த 30 நாட்களுக்குள் இறுதி செலவு அறிக்கையை வெற்றி பெற்ற எம்எல்ஏ உட்பட 59 வேட்பாளர்களும் தாக்கல் செய்ய வேண்டும். வரும் 24ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர் மீது நடவடிக்கை
ஒரு வேட்பாளர் அதிகப்பட்சமாக ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்ததாக செலவின பார்வையாளர் அறிக்கை அளித்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
செலவு கணக்கில் தவறு
வேட்பாளர்களின் செலவின அறிக்கையும், தேர்தல் பார்வையாளர்களின் செலவின அறிக்கையும் ஒத்துப்போகும் பட்சத்தில் எந்த சிக்கலும் வராது. வேட்பாளர்களின் செலவு கணக்கு அறிக்கையில் தவறு இருப்பது தெரியவந்தால் அது குறித்து வேட்பாளர் தரப்பில் விளக்கம் கேட்கப்படும்.
அறிக்கை தாக்கல்
அந்த விளக்கம் செலவின பார்வையாளருக்கு திருப்தி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் வேட்பாளர் செலவின விவரம் தொடர்பான அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு செலவின பார்வையாளர் அறிக்கை அளித்து விடுவார்.
தகுதி நீக்கம்
வெற்றி பெற்ற வேட்பாளரான டி.டி.வி.தினகரனும் தவறு செய்திருந்தால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்று தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.