டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் - நவநீதகிருஷ்ணன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்று அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையானது என்றும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற முடிவை தலைமை தேர்தல் ஆணையம் இன்று இரவு அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முன்பு ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா தரப்பு வக்கீல்கள் நேரில் ஆஜராகி ஆக்ரோஷமாக வாதாடினர்.
வாதம் முடிவடைந்துள்ள நிலையில் இரட்டை இலை யாருக்கு என்று தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்க உள்ளது. எம்ஜிஆர் அறிமுகம் செய்து அதிமுக தொண்டர்களின் மனதில் ஆழமாக வேர் ஊன்றிய இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று இரு அணிகளும் நம்பிக்கையாக உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், சசிகலா தலைமையிலான அதிமுகவே அங்கீகரிக்கப்பட்ட அதிமுக என்று தேர்தல் ஆணையத்திடம் வாதம் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சசிகலா தலைமையிலான அதிமுகவிற்கே பெரும்பான்மை எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து உள்ளதாகவும் கூறினார்.
சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் முன்பாக ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்துள்ளதாக கூறிய நவநீதகிருஷ்ணன், இரட்டை இலை தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டிடுவார் என்று கூறினார். டிடிவி தினகரன், அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிந்துரைத்த வேட்பாளர் என்றும் கூறினார்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எந்த சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று நவநீதகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அதிமுகவின் ஆட்சிமன்றக்குழு கூடி முடிவை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.