பிடிக்குதோ இல்லையோ.. தினகரன் பெரிய ரவுண்டு வரப் போகிறார்.. பொறுத்திருந்து பாருங்க!
Recommended Video
மதுரை: பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. ஸாரி பாஸ் நீங்க நினைக்கும் பெயர் இல்லை இது... இது தினகரன். ஆச்சரியமா இருக்குல்ல.. தென் மாவட்டங்கள் பக்கம் போய்ப் பாருங்க.. தினகரன் பெயருக்கு அப்படி ஒரு சப்போர்ட் குவிந்து கொண்டுள்ளது.
ஜாதி ரீதியான ஆதரவுதான் இது என்றாலும் கூட ஒட்டுமொத்த அதிமுகவையும் மெல்ல வளைத்து வருகிறார் தினகரன். இது இயல்பானதுதான். ஆர்.கே.நகரில் தினகரன் வாங்கிய வெற்றியானது தற்போது அவருக்கு முழுமையாக சாதகமாகத் திரும்பிக் கொண்டுள்ளது.
அதேசமயம், தினகரனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஜெயலலிதாவையே தூக்கிச் சாப்பிடக் கூடிய அளவுக்கு திறமையானவர் என்று அவரை எம்பியாக பார்த்து ரசித்த தேனி மாவட்ட மக்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள்.
விசில் போட்ட தினகரன்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தட்டுத் தடுமாறி தள்ளாடிக் கொண்டுள்ளது. அதன் தலைமைப் பொறுப்புக்கு இன்னும் யாரும் நிரந்தரமாக அமர்ந்தபாடில்லை. சசிகலா வந்தார். அவர் சிறைக்குப் போன பின்னர் தினகரன் கைப்பற்ற முனைந்தார். ஆனால் முடியவில்லை.
தலையில்லா அதிமுக
விலையில்லா திட்டங்கள் பலவற்றை கொடுத்த ஜெயலலிதாவுக்குப் பின்னர் தலையில்லா முண்டம் போல மாறி நிற்கிறது அதிமுக. ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பெயரில் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் அதிமுகவை கையில் வைத்துள்ளனர்.
விரைவில் மாறும் தலைமை
ஆனால் லகான் விரைவில் தினகரன் கைக்கு மாறும் என்று அதிமுகவினரே பேச ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்ட அதிமுகவினர் பெருமளவில் தினகரன் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர். சாதாரணமாக அல்ல, அலை அலையாக வரத் தொடங்கியுள்ளனராம்.
மாஸ் காட்டிய தினகரன்
தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் தற்போது தினகரன் பக்கம் வந்து விட்டனராம். தினகரன்தாங்க சரியான தலைவர். அவரிடம்தான் தலைமைத்துவ குணம் உள்ளது. இவர் மட்டும்தான் அதிமுகவை கட்டுக்கோப்பாக வைக்க முடியும். சிந்தாமல் சிதறாமல் பாதுகாக்க முடியும் என்று சொல்கிறார்கள் இவர்கள்.
கொண்டாடும் தேனி
தினகரனை தேனி மாவட்ட அதிமுகவினர் அப்படிக் கொண்டாடுகிறார்கள். தினகரன் பற்றிக் கேட்டாலே முகமெல்லாம் மலர்கிறது அவர்களுக்கு. ஏங்க இப்படி என்று கேட்டால், அட அவரை மாதிரி ஒரு கேரக்டரை ஜெயலலிதாவிடம் கூட பார்த்ததில்லை என்கிறார்கள்.
சிறப்பு கவனிப்பு
தினகரன் குறித்து தேனி மாவட்டத்தினர் கூறுகையில், அவர் எம்பியாக இருந்தது முதலே தேனி மாவட்டத்துக்காரர்கள் என்றால் மிகவும் பாசமாக பேசுவார். ஏதாவது வேண்டும் என்று போய் நின்றால் எதிர்பார்க்காத அளவுக்கு கவனித்து அனுப்புவார். அத்தனை பேரையும் சரியாக நினைவில்வைத்து விசாரிப்பார், பேசுவார். இயல்பான தலைவர் அவர்தான் என்று சொல்கிறார்கள்.
பெருந்தன்மையானவர்
தேனி மாவட்டம் என்றில்லை. தன்னை வந்து யார் சந்தித்தாலும் அவர்களது தேவை அறிந்து உதவுகிறாராம் தினகரன். இன்று நேற்றல்ல. பல காலமாகவே இதுதொடர்கிறதாம். தேனி மாவட்டத்தில் பல இடங்களில் அவர் மண்டபங்கள் கட்டி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். சமுதாய ரீதியாக வலுவாகவே அதிமுகவினரையும் தன்னை நாடி வந்தவர்களையும் தினகரன் கவனி்த்து வைத்துள்ளதால் அவர்கள் மொத்தமாக தினகரன் பக்கம்தான் உள்ளனர்.
முக்குலத்தோர் வாரிசாக உருவெடுக்கிறார்
முக்குலத்தோர் சமுதாயத்தின் மிகப் பெரிய அடையாளமாக தினகரன் உருவெடுக்கிறார் என்பதே நிதர்சனமாக உள்ளது. தற்போது அந்த சமுதாயத்தின் அடையாளமாக குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை. பலர் களத்தில் உள்ளனர். ஆனால் நின்று களமாடக் கூடிய தலைவராக தினகரன் மட்டுமே விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்பதால் இவரே அந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகவும் மாறி வருகிறார். தமிழகத்தின் முக்கிய வாக்கு வங்கிகளில் முக்குலத்தோர் வாக்கு வங்கியும் அதி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன் அலை
தற்போது தென் மாவட்ட அதிமுகவில் தினகரன் அலை வேகமாக வீசி வருகிறது. இது படிப்படியாக அதிமுக முழுவதும் வியாபிக்கும் என்கிறார்கள். விரைவில் தினகரன் வசம் அதிமுக போகும் என்றும் அடித்துச் சொல்கிறார்கள். பிடிக்குதோ இல்லையோ, சில காலம் தினகரனின் ஆட்டத்தை தமிழகம் பார்த்தே ஆக வேண்டும் என்றும் அடித்துச் சொல்கிறார்கள்.