தேவர் சிலைக்கான ஜெ. தங்க கவசத்தை சசிகலா நியமித்த பொருளாளரிடம் ஒப்படைக்க கோரி தினகரன் கடிதம்
பசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவசத்தை சசிகலா நியமித்த பொருளாளர் ரெங்கசாமியிடம் ஒப்படைக்க கோரி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை; பசும்பொன் தேவர் சிலைக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தை சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் ரெங்கசாமியிடம் ஒப்படைக்கக் கோரி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இங்குள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014-ல் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.
இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சி நிர்வாகிகளிடம் தர வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் மதுரை அண்ணா பேங்க் ஆப் இந்தியா மேலாளருக்கு டிடிவி தினகரன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளர். அதில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் ரெங்கசாமியிடம்தான் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும்.
அதேநேரத்தில் பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர்களிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க ஆட்சேபனை எதுவும் இல்லை. தங்களிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தால் ஜெயந்தி முடிந்த பின்னர் நவம்பர் 1-ந் தேதி முறைப்படி வங்கியில் ஒப்படைப்போம் என குறிப்பிட்டுள்ளார் தினகரன்.